UAE: 50,000 பூக்களுடன் பூத்துக் குலுங்கும் மலர் பண்ணை.. பலரின் கவனத்தை ஈர்த்த எமிராட்டி விவசாயி..!!

ஐக்கிய அரபு அமீரகம் என்றாலே பரந்த பாலைவனங்கள், கடலோர சமவெளிகள் மற்றும் கிழக்கில் கரடுமுரடான ஹஜர் மலைகள், வானுயர் கட்டிடங்கள் போன்றவைதான் நம் நினைவிற்கு வரும். பெரும்பாலும் பாலைவன நிலப்பரப்பால் மூடப்பட்டுள்ள அமீரகம் வறண்ட நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இத்தகைய நிலப்பரப்பில் பல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கும் மலர்த்தோட்டம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஆம், ராஸ் அல் கைமாவில் உள்ள அய்சிமா (Aisima) என்ற பகுதியில் மொத்தம் 50,000 பூக்களைக் கொண்ட வண்ணமயமான மலர்ப்பண்ணை ஒன்று உள்ளது. முகமது ஒபைத் அல் மஸ்ரூய் என்ற எமிராட்டி விவசாயிக்கு பூக்கள் மீது இருந்த ஆர்வம்தான், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான பூக்களை பூக்கச் செய்து சாத்தியமாக்கியுள்ளது. இந்தப் பண்ணையில் 25 க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட மலர் வகைகள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லாவெண்டர் எண்ணெய் மற்றும் பிற தனித்துவமான மலர் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அல் மஸ்ரூய் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட இந்த பண்ணை, அதன் வண்ண மலர்களின் வரிசைக்கு பிரபலம் அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்குப் பிறகு திறக்கப்படும். வெள்ளிக்கிழமைகள் தவிர, தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையாளர்கள் பண்ணையை பார்வையிடலாம். நுழைவுக்கட்டணம் ஒரு நபருக்கு 15 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படும், அதே நேரத்தில் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக நுழையலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
மலர்ப்பண்ணை கனவு
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த போது மலர்ப் பண்ணை வைத்திருக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதாகவும், அவரது மோகத்தினால் ஆன்லைனில் பல்வேறு மலர் பண்ணைகளை ஆராய்ச்சி செய்ததாகவும் எமிராட்டி விவசாயி தெரிவித்துள்ளார்.
முதலில் ஐரோப்பாவிற்கு ஒரு பயணத்தின் போது, அங்குள்ள மலர் விதைகளை சேகரித்துஐக்கிய அரபு அமீரகத்தில் நடவு செய்திருக்கிறார். அது வெற்றிகரமாக வளர ஆரம்பித்திருக்கின்றது. பின்னர், அவர் அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் இத்தாலி ஆகியவற்றிலிருந்து விதைகளை இறக்குமதி செய்திருக்கிறார்.
ஆரம்பத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இத்தகைய பூக்களை வளர்ப்பதற்கான நம்பகத்தன்மையை பலர் சந்தேகித்துள்ளனர். ஆனால் உறுதியுடன் அவர் வெற்றிகரமாக அரிய மற்றும் தனித்துவமான வகைகளை பயிரிட்டு வெற்றி கண்டுள்ளார். எவ்வாறாயினும், ஒவ்வொரு மலர் வகைக்கும் உகந்த நடவு நேரத்தை தீர்மானிப்பதில் அல் மஸ்ரூய் சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். ஏனெனில் சில வகைகளுக்கு பூக்க இரண்டு மாதங்கள் தேவைப்படுகின்றன, மற்ற இனங்கள் குறைந்த நேரம் எடுக்கும். அனைத்து பூக்களும் ஒரே நேரத்தில் பூப்பதை கவனமாகக் கண்காணித்து நடவு செய்யும் நேரம் உறுதி செய்கிறது.
இன்று, அவரது பண்ணை 25 க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட மலர் வகைகளைக் கொண்டுள்ளது, உள்ளூர் விநியோகத்திற்காக இந்த பூக்களிலிருந்து விதைகளை உற்பத்தி செய்யும் திட்டங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பூக்களின் வகைகளில் ஸ்னாப்டிராகன், சால்வியா, ஸ்டாக் மற்றும் மெக்சிகன் சூரியகாந்தி மற்றும் பிற இனங்கள் அடங்கும்.
அவரது பெருமைமிக்க சாதனைகளில் ஒன்று, கடந்த சீசனில் அவர் பயிரிட்ட லாவெண்டர், இது அமீரகத்தின் கோடை வெப்பத்தைத் தாங்கி, இப்போது அதன் இரண்டாவது பூக்கும் பருவத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வாசனை திரவியங்கள், சோப்புகள், லோஷன்கள், ஷாம்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் பல்துறைத்திறனுக்காக அறியப்பட்ட லாவெண்டர் எண்ணெயை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் கனவையும் அல் மஸ்ரூய் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது தந்தையிடமிருந்து விவசாய அறிவைப் பெற்றதாகக் கூறும் அல் மஸ்ரூய், விரைவில் போஸ்னியாவில் ஒரு பண்ணையை நிருவப்போவதாகவும், அங்கு ஐரோப்பாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் சுமார் 10,000 லாவெண்டர் செடிகளை பயிரிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு
அல் மஸ்ரூய் கூற்றுப்படி, பல பார்வையாளர்கள் பண்ணையின் அழகைப் பற்றி ஆச்சரியங்களை வெளிப்படுத்தினர், அவர்கள் பெரும்பாலும் ஆண்டுக்கு பல முறை பண்ணையைப் பார்வையிட மீண்டும் அவ்விடத்தை நாடுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த பண்ணையில் குழந்தைகளுக்கான குதிரை சவாரிகள், பல்வேறு பறவை இனங்கள், மயில் மற்றும் ஒரு வசதியான கஃபே ஆகியவை உள்ளன. கோடை மாதங்களில், பண்ணை செப்டம்பர் வரை இருக்கும், அக்டோபரில் நடவு தொடங்குவதற்கு முன்பு உரங்கள் மற்றும் நீர்ப்பாசனத்துடன் மண்ணைத் தயார்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அல் மஸ்ரூய் தனது சாதனைகளுக்காக ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளரும், உச்ச கவுன்சில் உறுப்பினருமான ஷேக் சவுத் பின் சாகர் அல் காசிமியிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். நகராட்சி மற்றும் சுற்றுலா ஆணையம் உட்பட உள்ளூராட்சி துறைகள், எந்தவொரு குற்றச்சாட்டுமின்றி பண்ணைக்கு அனுமதி வழங்குவதன் மூலம் அவரது முயற்சிகளை ஆதரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel