பொது மன்னிப்பு முடிந்த பின் 6,000 வெளிநாட்டவர்களை கைது செய்த அமீரகம்.. சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் மீது நடவடிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பொது மன்னிப்பு திட்டம் முடிவடைந்த நிலையில், சமீபகாலமாக நாட்டில் உள்ள அதிகாரிகளால் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களைக் கண்டறியும் ஆய்வுப் பிராச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுப் பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 270 க்கும் மேற்பட்ட ஆய்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஜனவரி மாதம் முழுவதும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சுமார் 6,000 க்கும் மேற்பட்ட விசா விதிமீறல் புரிந்து தங்கியுள்ளவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் உயர் அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்துள்ளார்.
‘Towards a safer society’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு பிரச்சாரங்களில் பிடிபட்ட நபர்களில் 93 சதவீதத்தினரை நாடுகடத்துவதற்குண்டான செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகையால், இத்தகைய விதிமீறல்களை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அடையாளம், குடியுரிமை, சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான (ICP) கூட்டாட்சி அதிகாரத்தின் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி அவர்கள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
அமீரகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை நான்கு மாத சலுகை காலத்தில், சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு அமீரகத்திற்கு மீண்டும் வருவதற்கான வாய்ப்பை வழங்க நுழைவு தடையை செயல்படுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது ஒரு புதிய பணி ஒப்பந்தத்தைப் பெறவோ, நாட்டில் சட்டப்பூர்வமாக இருக்கவோ வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த முயற்சி கணிசமான எண்ணிக்கையிலான தனிநபர்கள் தங்கள் நிலையை ஒழுங்குபடுத்த உதவிய நிலையில், மீதமுள்ள விதிமீறுபவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கும் நாடு முழுவதும் அதிகாரம் அதன் ஆய்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியது என்பதையும் அந்த அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.
பூஜ்ஜிய சகிப்புத்தன்மை
இது குறித்து ICPயின் அடையாள மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களின் செயல் இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் சயீத் சேலம் அல் ஷம்சி அவர்கள் பேசிய போது, “சட்ட நடவடிக்கைகள் மற்றும் அபராதங்களானது விதிகளை மீறுபவர்களுக்கும், அவர்களை அடைக்கலம் அல்லது பணியமர்த்தியவர்களுக்கும் விதிக்கப்படுகின்றன” என்று எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் ரெசிடென்ஸி சட்டம், நுழைவு மற்றும் குடியிருப்பு வசதி செய்யும் அல்லது ரெசிடென்ஸ் மீறலில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 10,000 திர்ஹம்ஸ்க்கும் குறையாத அபராதம் விதிக்கிறது.
மேலும், ஒரு நபர் தனது ஸ்பான்சராக இல்லாமல் இருந்து விசா விதிமீறல் புரிந்த நபரை பணியமர்த்தினால், வேலை அமர்த்திய நபருக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அதேபோல், விதிமீறல் செய்பவர் தங்களுக்கு நியமிக்கப்பட்ட ஸ்பான்சரைத் தவிர வேறு ஒருவருக்காக வேலை செய்ததாக பிடிபட்டால், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, சிறைத்தண்டனை, நாடு கடத்தல் மற்றும் அமீரகத்தில் மீண்டும் நுழைவதற்கு நிரந்தரத் தடை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார் என்பதையும் அதிகாரி விளக்கியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel