குடியிருப்பு கட்டிடங்களில் அதிகரிக்கும் நெரிசல்.. மீண்டும் நேரடி ஆய்வை தொடங்கும் அபுதாபி.. 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம்..!!

அபுதாபியில் உள்ள நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறையானது (DMT) எமிரேட்டில் உள்ள குடியிருப்பு சொத்துக்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் பிரச்சினையை இலக்காகக் கொண்ட ‘உங்கள் வீடு, உங்கள் பொறுப்பு (Your Home, Your Responsibility)’ என்ற முக்கியமான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சியானது அபுதாபி எமிரேட்டிற்குள் குடியிருப்பு கட்டிடங்களை வைத்திருக்கும் சொத்து உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் ஆக்கிரமிப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதுடன், உள்ளூர் சமூகங்களில் ஆக்கிரமிப்பை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அதிகாரம் தெரிவித்துள்ளது.
பிரச்சாரத்தின் முக்கிய நோக்கங்கள்:
குத்தகைதாரர்கள் சொத்து ஆக்கிரமிப்பு சட்டத்திற்கு இணங்கவும், அவர்களின் வாடகை சொத்துக்கள் தவ்தீக் (tawtheeq) அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும், குத்தகைதாரர்கள் தங்கள் நியமிக்கப்பட்ட மவாகிஃப் பார்க்கிங் மண்டலத்திற்குள் அனைத்து வாகனங்களும் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் இந்த பிரச்சாரம் வலியுறுத்துகிறது.
அதுமட்டுமில்லாமல், இந்த பிரச்சாரம் அங்கீகரிக்கப்படாத மறுவாடகைக்கு விடுவதை தடுப்பதையும் வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் குத்தகைதாரர் உரிமைகளைப் பாதுகாக்க இது உதவுவதுடன், எமிரேட்டிற்குள் வாடகை ஒப்பந்தங்களின் நேர்மையை நிலைநிறுத்தவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) தெரிவித்துள்ளது.
குத்தகைதாரர் மற்றும் நில உரிமையாளர்களுக்கான பொறுப்புகள்
- அங்கீகரிக்கப்படாத துணை குத்தகைகள் மூலம் வாடகைக்கு எடுப்பதைத் தவிர்க்கவும்.
- குடியிருப்பு கட்டிடங்கள் தவ்தீக் அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- குடியிருப்பாளர்களின் வாகனங்கள் சரியான மவாகிஃப் மண்டலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- நில உரிமையாளர்கள் மற்றும் சொத்து மேலாளர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு பொருத்தமான வீட்டுவசதியை வழங்கவும், சொத்துக்கள் ஒழுங்குமுறை தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
ஆய்வுகள் மற்றும் அபராதங்கள்
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நெரிசலான சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்காக DMT நேரடி ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின் போது விதிமீறலில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால் பின்வரும் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு 5,000 திர்ஹம் முதல் 500,000 திர்ஹம் வரை அபராதம்.
- மீண்டும் மீண்டும் தவறு செய்யும் நபர்களுக்கு, அபராதம் 1 மில்லியன் திர்ஹம் வரை அதிகரிக்கலாம்.
- நில உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தவ்தீக் ஒப்பந்தங்கள் இடைநிறுத்தப்படும்.
- குடியிருப்பு மவாகிஃப் மண்டலங்களில் பதிவு செய்யப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம், அபுதாபியில் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துதல், சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்தல் மற்றும் குத்தகைதாரர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை DMT நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel