துபாய் மெட்ரோ மற்றும் டிராமில் மீறல்களைக் கண்காணிக்க புதிய அமைப்பை அறிமுகப்படுத்திய RTA…!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஆனது, பொதுப் போக்குவரத்தில் அதிக பங்களிக்கும் ரெட் மற்றும் க்ரீன் வழித்தடங்களில் இயங்கும் மெட்ரோ மற்றும் டிராம் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று புதன்கிழமை இது குறித்து RTA வெளியிட்ட அறிவிப்பில், இந்த புதிய ஒருங்கிணைந்த அமைப்பு, சீரான மற்றும் திறமையான சேவைகளை உறுதி செய்வதற்காகவும், பயணிகள் விதிமுறைகளுடன் இணங்குவதை மேம்படுத்துவதற்காகவும், ஆய்வு நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கி மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று விளக்கமளித்துள்ளது.
கூடுதலாக, நேரடி கண்காணிப்புத் திரைகளுடன் பொருத்தப்பட்ட இந்த அமைப்பானது டிக்கெட் ஆய்வாளர்களை உடனடியாக மேற்பார்வையிடும் என்றும், குறிப்பாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைப் பாதிக்கும் எந்தவொரு மீறலும் விரைவாகவும் திறம்படவும் தீர்க்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய அமைப்பின் முக்கிய அம்சங்கள்:
1. மீறல்களைக் கண்டறிதல்: மெட்ரோ மற்றும் டிராம் சேவைகளில் சில்வர் நோல் அட்டைதாரர்கள் கோல்ட் கிளாஸ் கேபினை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவது மற்றும் பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களை தவறாகப் பயன்படுத்துவது போன்ற பிரச்சினைகளை இந்த அமைப்பு குறிவைக்கிறது. இது பொதுப்போக்குவரத்து வசதிகளில் பயணிகள் ஒழுங்கு மற்றும் நியாயத்தை பராமரிக்க உதவுகிறது.
2. டிக்கெட் ஆய்வாளர் பணியமர்த்தல்: இது மீறல்களை திறம்பட கண்டறிந்து கட்டுப்படுத்த அதிக கண்காணிப்பு தேவைப்படும் உயர் முன்னுரிமை பகுதிகளை அடையாளம் காணும். மேலும், கட்டண ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டிய உயர் முன்னுரிமை பகுதிகளைத் தீர்மானிக்க இந்த அமைப்பு தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
3. நிகழ்நேர கண்காணிப்பு: ஆய்வாளர்களின் செயல்திறன் மற்றும் டிக்கெட் ஆய்வு நடவடிக்கைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், நேரடி புதுப்பிப்புகளை வழங்கவும், செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை உருவாக்கவும் இந்த அமைப்பு அனுமதிக்கிறது.
4. நிகழ்வு அடிப்படையிலான பணியமர்த்தல்: இந்த அமைப்பு பல தரவு பகுப்பாய்வின் அடிப்படையில், அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் சாத்தியமான மீறல்கள் உள்ள பகுதிகளை கணித்து, முக்கிய நிகழ்வுகளுக்கு விரைவான பதில்களுக்காக அதிக ஆபத்துள்ள நிலையங்களுக்கு ஆய்வுக் குழுக்களை விரைவாக அனுப்ப உதவுகிறது.
5. பயணிகள் தரவு: இந்த அமைப்பு பயணிகளின் தரவைப் பதிவு செய்கிறது. இந்த தரவு மீண்டும் மீண்டும் குற்றவாளிகளை அடையாளம் காணவும், விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் சரியான நடத்தையைப் பராமரிப்பது குறித்து பயணிகளுக்குக் கற்பிக்கவும் உதவுகிறது.
6. மேம்படுத்தப்பட்ட ஆய்வு விகிதங்கள்: இந்த அமைப்பு ஆய்வு விகிதங்களில் மாதாந்திர 14% அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது, இது மீறல்களை சிறப்பாகக் கண்டறிவதற்கும் அதிக பயணிகளின் இணக்கத்திற்கும் வழிவகுத்ததாக ஆணையம் கூறியுள்ளது.
7. பிரத்யேக கண்காணிப்பு மையம்: ஆய்வு மேற்பார்வை மற்றும் மீறல் கண்காணிப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு சிறப்பு மையத்தை இந்த அமைப்பு கொண்டுள்ளது. இது சிறந்த பயன்பாடு மற்றும் அனைத்து செயல்பாட்டு நடவடிக்கைகளின் நிகழ்நேர கண்காணிப்பை உறுதி செய்கிறது.
RTA வின் படி, இந்த ஒருங்கிணைந்த அமைப்பு, நகரம் முழுவதும் மெட்ரோ மற்றும் டிராம் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் அதே வேளையில், பயணிகளுக்கு மிகவும் திறமையான, பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel