துபாயில் வாகன ஓட்டுநர்களை மதிப்பிட புதிய ஸ்மார்ட் சிஸ்டம் அறிமுகம்!! வாகன ஓட்டி ஆபத்தானவரா, பாதிக்கப்பட்டவராக என கண்டறிய வசதி..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), சாலை பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில், தற்போது விபத்துகள், அபராதங்கள் மற்றும் பிளாக் பாயிண்ட்கள் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் வரலாற்றின் அடிப்படையில் ஓட்டுநர் அபாய மதிப்பெண்ணை கணக்கிடும் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI)- மூலம் இயக்கப்படும் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
திங்களன்று நடந்த துபாய் AI வீக்(Dubai AI week) நிகழ்வின் போது RTA அதன் கியோஸ்கில் ‘Driver Risk Score’ என்ற புதிய சிஸ்டத்தை காட்சிப்படுத்தியது. இது தற்போது சோதனையில் உள்ளதாகவும், மேலும் பின்னர் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Big data’ மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தளம், ஒரு ஓட்டுநர் எவ்வளவு பாதுகாப்பானவர் அல்லது ஆபத்தானவர் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிப்பதன் மூலம் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கார்ப்பரேட் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் துறையின் நிர்வாக இயக்குநரும் RTA-வின் தலைமை AI அதிகாரியுமான முகமது அல்முதர்ரெப் கூறுகையில், இந்த அமைப்பு ஒரு ஓட்டுநரின் ஆபத்து அளவைக் கணக்கிட நிறுவனத்திற்குள் இருந்து ஒருங்கிணைந்த தரவைப் பயன்படுத்துகிறது என்று துபாய் AI வீக்கில் நடந்த குழு விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, ஓட்டுநர்கள் ஏற்படுத்திய போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை, அவர்கள் எத்தனை அபராதங்களைப் பெற்றுள்ளனர் மற்றும் அவர்களின் ஓட்டுநர் பதிவில் பிளாக் பாய்ண்ட்கள் போன்ற மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
குறைந்த, நடுத்தர அல்லது அதிக ஆபத்து என வகைப்படுத்தப்பட்ட தனிப்பட்ட இந்த மதிப்பெண்ணைப் பெற ஓட்டுநர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடி மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களை உள்ளிடலாம் என்று விளக்கியுள்ளார். இவ்வாறு தனிப்பட்ட ஓட்டுநர் நடத்தையின் தரவு சார்ந்த மதிப்பீட்டை வழங்குவதன் மூலம் காப்பீட்டு வழங்குநர்கள், சட்ட அமலாக்கம் மற்றும் சாலை பாதுகாப்பு திட்டமிடுபவர்களை ஆதரிக்க இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
துபாய் மக்கள்தொகை வளர்ச்சியால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்து வருகிறது. தற்பொழுது நகரத்தின் மக்கள் தொகை 3.926 மில்லியனை எட்டியுள்ளது. அதே நேரத்தில் சாலிக்-பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2023 இல் 4.013 மில்லியனில் இருந்து 2024 இல் 4.382 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புதிதாக வரவிருக்கும் இந்த ஓட்டுநர் ரிஸ்க் ஸ்கோர் அமைப்பு இளைய ஓட்டுநர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினரை அடையாளம் காணவும், விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரச்சாரங்களை செயல்படுத்தவும் உதவும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து பேசுகையில், “குறிப்பிட்ட வயது நபர்கள் அல்லது நடத்தை முறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், ஓட்டுநர்கள் தங்கள் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும், விதிமீறல்கள் மற்றும் விபத்துகளைக் குறைக்கவும் நாங்கள் வழிகாட்ட முடியும்” என்று கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel