ADVERTISEMENT

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு? ஷார்ஜா-துபாய் இடையே புதிய சுரங்கப்பாதை திட்டத்தை வரவேற்கும் மக்கள்

Published: 21 Jun 2026, 8:41 PM |
Updated: 21 Jun 2026, 8:41 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவின் அல் தாவூன் (Al Taawun) பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு, ஒவ்வொரு நாளும் நீண்ட வாகன வரிசைகள், ஒன்றோடொன்று ஒட்டியவாறு செல்லும் வாகனங்கள் என போக்குவரத்து நெரிசலோடுதான் தொடங்குகிறது. ஆனால் இப்போது, ​​750 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான ஒரு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டம் இந்த நிலையை மாற்றியமைக்கவுள்ளது.

ADVERTISEMENT

ஆம், ஷார்ஜா மற்றும் துபாய் இடையேயான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், இணைப்பு வசதியை மேம்படுத்தவும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, ஷார்ஜாவின் ஆட்சியாளரும் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினருமான மாண்புமிகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், 750 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த லட்சியத் திட்டத்தின் முக்கிய அம்சம், அல் தாவூன் பகுதிக்கு அடியில் அமைக்கப்படவுள்ள புதிய இருவழிச் சுரங்கப்பாதையாகும் (dual-carriageway underground tunnel). இது அல் நஹ்தா பாலம் வழியாக துபாயுடன் நேரடி இணைப்பை உருவாக்குகிறது.

ADVERTISEMENT

ஒவ்வொரு வாரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடும் மக்களுக்கு, இந்த அறிவிப்பு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு தீர்வாக அமைந்துள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில் “இந்தப் பகுதிக்குள் வருவதோ அல்லது வெளியேறுவதோ மிகுந்த சோர்வை அளிப்பதாக மாறியுள்ளது,” என்று அல் தாவூன் பகுதியில் வசிக்கும் ஒரு குடியிருப்பாளர் கூறியுள்ளார். “இத்திட்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சாலை வசதியை மேம்படுத்தினால், அது எங்கள் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது போன்றே பல குடியிருப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் இத்திட்டத்தின் நீண்டகால நன்மைகளை வரவேற்றாலும், கட்டுமானப் பணிகளால் ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கும் பலர் தயாராகி வருகின்றனர். இந்த இடைக்காலச் சூழலைக் கையாள, மாற்றுப் பாதைகள், கார்-பூலிங் மற்றும் பொதுப் போக்குவரத்துத் தீர்வுகள் குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே விவாதித்து வருகின்றனர்.

ஷார்ஜா மற்றும் துபாய் இடையிலான இணைப்புகளை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட பரந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சுரங்கப்பாதை அமைகிறது. மற்றொரு முக்கியத் திட்டமான ‘நூர் சாலை’ (Noor Road), அல் உரூபா ஸ்ட்ரீட்டிலிருந்து (Al Orooba Street) அல் நஹ்தா பாலம் வழியாக துபாய்க்கு நேரடி இணைப்பை வழங்கும். இது 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சாலை மேம்பாடுகள் எமிரேட்ஸ் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதோடு, எக்ஸ்போ சென்டர் ஷார்ஜா போன்ற முக்கிய இடங்களுக்கான இணைப்பையும் வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், பயண நேரத்தைக் குறைத்தல் மற்றும் இரு அமீரகங்களுக்கு இடையே புதிய நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இத்திட்டம் நீண்டகாலப் பலன்களை அளிக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அல் தாவூன் சுரங்கப்பாதைக்கான பணிகள் நிறைவடையும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இப்பகுதியின் மிகத் தொடர்ச்சியான போக்குவரத்து நெரிசல் சிக்கல்களில் ஒன்றைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக மக்கள் இத்திட்டத்தைப் பார்க்கின்றனர்.

கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும்போது, பயணிகள் சில மாற்றுப்பாதைகளையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடலாம். ஆனால், வாரந்தோறும் பல மணிநேரங்களை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பலருக்கு, ஷார்ஜா மற்றும் துபாய் இடையே விரைவான மற்றும் சுமூகமான பயணத்திற்கான வாக்குறுதி இப்போதே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel