அபுதாபியில், தங்கள் வாகனங்களை இயங்கவிட்ட நிலையில் கவனிக்காமல் விட்டுச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படலாம். இச்செயல்முறை கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது என காவல்துறை எச்சரித்துள்ளது.
வாகன ஓட்டிகள், கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் சென்றாலும், ஏடிஎம் பயன்படுத்தினாலும், எரிபொருள் நிரப்பினாலும், அல்லது தொழுகைக்காக ஒதுங்கிச் சென்றாலும், அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு தங்கள் வாகனத்தின் இன்ஜினை அணைத்து, சாவியை எடுத்து, வாகனத்தைப் பூட்ட வேண்டும் என அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
வாகனத்தை இயங்கவிட்ட நிலையில் கவனிக்காமல் விட்டுச் செல்வது, திருட்டு, வாகனத் தீ விபத்துகள் மற்றும் பிற ஆபத்தான சம்பவங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
குழந்தைகளுக்கு அதிக ஆபத்து
அதுமட்டுமில்லாமல், வாகனத்தின் இன்ஜின் இயங்கிக்கொண்டிருக்கும்போது, குழந்தைகளை, குறிப்பாக கைக்குழந்தைகளை, வாகனங்களுக்குள் விட்டுச் செல்வதற்கு எதிராகவும் காவல்துறை எச்சரித்துள்ளது. இது அவர்களின் பாதுகாப்பிற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தல் என்றும் விவரித்துள்ளது.
இது தொடர்பாக அபுதாபி காவல்துறை வெளியிட்ட ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்று, கவனிக்கப்படாத நிலையில் இயங்கும் வாகனங்களின் ஆபத்துக்களை எடுத்துரைக்கிறது. காரிலிருந்தே வெளியேறும் போது என்ஜினை அணைக்க சில வினாடிகள் எடுத்துக்கொள்வது விபத்துகள், திருட்டு ஆகியவற்றைத் தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் உதவும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
சட்டரீதியான விளைவுகள்
குறிப்பாக கோடை மாதங்களில், நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் குழந்தைகளை ஒருபோதும் கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் என்று பெற்றோர்களையும் வாகன ஓட்டிகளையும் வலியுறுத்தும் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
ஒரு குழந்தையை வாகனத்திற்குள் விட்டுச் செல்வது அல்லது மறந்துவிடுவது என்பது ஒரு கண நேரத் தவறு மட்டுமல்ல, ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின் கீழ் ஒரு குற்றச் செயல் என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு ஒரு குழந்தைக்கு ஆபத்தை விளைவித்ததாகக் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மற்ற சட்டரீதியான விளைவுகளுடன் கூடுதலாக, கணிசமான அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ளுமாறு எச்சரித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel