ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், துபாய் காவல்துறையானது அந்த எமிரேட் முழுவதும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன ஓட்டிகளுக்கு இலவச வாகனப் பரிசோதனைகளை வழங்கும் ‘விபத்துகளற்ற கோடைக்காலம்’ என்ற பிரச்சாரத்தை, ‘ENOC AutoPro’ நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.
போக்குவரத்துத் துறையின் (General Department of Traffic) தலைமையிலான இந்த முன்னெடுப்பு, வாகன ஓட்டிகள் பயணத்திற்கு முன் தங்கள் வாகனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஊக்குவிப்பதன் மூலம் சாலை விபத்துகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாகனங்கள் சாலைப் பயன்பாட்டிற்கு ஏற்ற நிலையில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், டயர்களின் நிலை மற்றும் இன்ஜின் ஆயில் (engine oil) உள்ளிட்ட 10 முக்கியப் பாதுகாப்புச் சோதனைகளை உள்ளடக்கிய இலவச வாகனப் பரிசோதனைகளை ‘ENOC AutoPro’ தனது பராமரிப்பு மையங்களில் வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்பரிசோதனையை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு நான்கு செட் இலவச டயர்களில் ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், இந்நிறுவனம் தனது சமூக ஊடகத் தளங்கள் வாயிலாக ஒரு ராஃபிள் போட்டியையும் நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து விழிப்புணர்வுத் துறையின் இயக்குனர் கர்னல் தலால் அல் மன்சூரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எமிரேட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு முக்கிய கவலையாகத் தொடர்வதாகவும், போக்குவரத்து தொடர்பான உயிரிழப்புகளைக் குறைக்கவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் துபாய் காவல்துறை தொடர்புடைய அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலைப் பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு, காவல்துறை தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்துவதோடு, முக்கியக் கூட்டாளர்களுடனும் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்
அவரைத் தொடர்ந்து போக்குவரத்து விழிப்புணர்வுத் துறையின் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் ரஷித் ஹுமைத் பின் இந்தி கூறுகையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதன் மூலம் நாட்டை உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக நிலைநிறுத்த முயலும் ‘We the UAE 2031’ தொலைநோக்குப் பார்வையின் நோக்கங்களுக்கு இப்பிரச்சாரம் ஆதரவளிப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்தல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் உள்துறை அமைச்சகம், துபாய் காவல்துறை மற்றும் அவற்றின் கூட்டாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழாவின் போது, துபாய் முழுவதும் பாதுகாப்பான சாலைகளை ஊக்குவிப்பதில் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டதற்காக, போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுப் பிரிவின் உறுப்பினர்களை கர்னல் அல் மன்சூரி கௌரவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel