ADVERTISEMENT

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்: 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்களை இடைமறித்த குவைத்!!

Published: 8 Jul 2026, 6:36 PM |
Updated: 8 Jul 2026, 6:36 PM |
Posted By: Menaka

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவுப் படைகளுக்கு இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய பதற்றம் வளைகுடா நாடுகள் முழுவதும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

இவ்வாறு பிராந்திய நாடுகள் தீவிர எச்சரிக்கை நிலையில் உள்ள சூழலில், தனது வான்பரப்பிற்குள் நுழைந்த பல வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறித்து அழித்ததாக குவைத் உறுதிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை அதிகாலையில் நாட்டின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு விரோத பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக குவைத் ஆயுதப் படைகள் தெரிவித்தன.

மேலும், இந்த இடைமறிப்பு நடவடிக்கைகளால் எந்தவித உயிரிழப்போ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து பாதுகாப்புப் பிரிவு செய்தித் தொடர்பாளர் கர்னல் சவுத் அல்-ஓதைபி அவர்கள் பேசுகையில், அச்சுறுத்தல்களை முறியடிக்க ஆயுதப் படைகள் உடனடியாகச் செயல்பட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து தயார் நிலையில் இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் பிராந்தியத்தில் நிலவும் சூழலை ராணுவம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், குடிமக்கள் மற்றும் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில், வளைகுடா நாடுகள் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வரும் வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டன அல்லது அவை எதை இலக்காகக் கொண்டிருந்தன என்பது குறித்த விவரங்களை குவைத் அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாகச் செயல்படுவதாகவும், எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவை என்றும் அவர்கள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel