துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அடுத்த தலைமுறை ‘நோல்’ (Nol) கட்டண முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதால், பயணிகள் விரைவில் QR குறியீடுகள், வங்கி அட்டைகள் மற்றும் டிஜிட்டல் வாலட்களைப் (digital wallets) பயன்படுத்தி பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தைச் செலுத்த முடியும்.
2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட நோல் அட்டை அமைப்பில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மேம்பாட்டுப் பணியில் 72 சதவீதத்தை RTA நிறைவு செய்துள்ளது. துபாய் பணமில்லா பொதுப் போக்குவரத்து அமைப்பை நோக்கி நகரும் நிலையில், புதிய கணக்கு அடிப்படையிலான டிக்கெட் முறை (ABT) தளம் 2027-ன் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாடு தற்போதைய அட்டை அடிப்படையிலான முறைக்கு மாற்றாக, QR-குறியீடு டிக்கெட்டுகள், வங்கி அட்டைகள், டிஜிட்டல் வாலட்கள் மற்றும் புதிய தலைமுறை நோல் அட்டைகளை ஆதரிக்கும் ஒரு மேம்பட்ட டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது துபாயின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பில் பயணத்தை மிகவும் வசதியானதாக மாற்றும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து RTA-வின் இயக்குநர் ஜெனரலும் நிர்வாகக் குழுவின் தலைவருமான மத்தார் அல் தாயர் (Mattar Al Tayer) வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டம் ஆணையத்தின் டிஜிட்டல் மாற்ற உத்தியில் ஒரு முக்கிய மைல்கல் என்றும், உலகின் மிகச் சிறந்த ஸ்மார்ட் நகரங்களில் ஒன்றாக மாறுவதற்கான துபாயின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஆதரவளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மூன்று கட்டங்கள்
RTA வெளியிட்டுள்ள விபரங்களின் படி, இத்திட்டம் மூன்று கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டத்தில், பயணிகள் டிஜிட்டல் தளங்கள் வழியாக QR குறியீடுகளைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்கவும் சரிபார்க்கவும் (validate) முடியும்.
இரண்டாவது கட்டத்தில், வாடிக்கையாளர் கணக்குகளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட மற்றும் வங்கி கட்டண முறைகளுடன் இணக்கமான புதிய தலைமுறை நோல் கார்டுகள் அறிமுகப்படுத்தப்படும்.
இறுதிக் கட்டத்தில், பயணிகள் வங்கி அட்டைகள் மற்றும் டிஜிட்டல் வாலட்களைப் பயன்படுத்தி நேரடியாகக் கட்டணம் செலுத்த முடியும். இதனால் அசல் நோல் கார்டை physical card) எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
பயனர்களுக்கான புதிய அம்சங்கள்
மேம்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் கீழ், பயணிகள் தனிப்பட்ட கணக்குகளை உருவாக்கவும், குடும்ப உறுப்பினர்களின் அட்டைகள் உட்பட பல நோல் அட்டைகளை இணைக்கவும், அவற்றை ஒரே தளத்தின் மூலம் நிர்வகிக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும், வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தானியங்கி பேலன்ஸ் ரீசார்ஜ் (auto top-up), பரிவர்த்தனை வரலாறு, கார்டை முடக்குதல், இருப்புத் தொகையை மீட்டெடுத்தல் மற்றும் சுயவிவர மேலாண்மை போன்ற வசதிகளையும் இந்த அமைப்பு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கு அடிப்படையிலான மாதிரி, பல்வேறு போக்குவரத்து சேவைகளில் மிகவும் நெகிழ்வான கட்டண விருப்பங்களையும் ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம், புதிய நோல் கார்டு காலப்போக்கில் ஒரு வங்கி அட்டையைப் போலவே செயல்படும் என்றும், பயனர்கள் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் பணம் செலுத்த இது உதவும் என்றும் RTA தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தை ஆதரிக்கும் வகையில், துபாயின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பு முழுவதும் டிக்கெட் அமைப்புகள், கட்டணம் செலுத்தும் சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் கியோஸ்க்களும் (smart kiosks) மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 2009-ல் துபாய் மெட்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நோல் அட்டை, துபாயில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக் கருவிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த சமீபத்திய மேம்படுத்தல், துபாய் பணமில்லா உத்திக்கு மேலும் ஆதரவளித்து, அமீரகத்தின் ஸ்மார்ட் மொபிலிட்டி சூழலமைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel