ADVERTISEMENT

துபாயில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கு நம்பிக்கையளிக்கும் மனிதாபிமான மையம்..! தங்குமிடம் முதல் இலவச தாயகப் பயணம் வரை என்னென்ன வசதிகள்?

Published: 5 Aug 2026, 8:43 PM |
Updated: 5 Aug 2026, 8:45 PM |
Posted By: Menaka

பல்வேறு ஆசைகள் மற்றும் கனவுகளுடன் தாய்நாட்டை விட்டு வெளியேறி துபாய்க்கு வரும் ஒவ்வொருவரின் பயணமும் திட்டமிட்டபடி முடிவதில்லை. பலர் புதிய வாய்ப்புகளைத் தேடி வந்தாலும், சிலர் வேலை இழப்பு, பணப் பற்றாக்குறை, ஆள்சேர்ப்பு மோசடிகளுக்குப் பலியாகுதல் அல்லது தனிப்பட்ட நெருக்கடிகளைச் சந்திப்பதன் காரணமாக துபாயிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். துபாய் மையம் ஒன்று, இத்தகைய மக்கள் கண்ணியத்துடன் தாயகம் திரும்ப அமைதியாக உதவுகிறது.

ADVERTISEMENT

ஒவ்வொரு ஆண்டும், சட்ட, நிதி அல்லது மனிதாபிமானக் காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற முடியாத ஆயிரக்கணக்கான மக்கள், குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தால் (GDRFA) இயக்கப்படும் துபாயின் தங்குமிட மையத்தில் தற்காலிக தங்குமிடத்தையும் ஆதரவையும் பெறுகின்றனர்.

அல் அவிரில் அமைந்துள்ள இந்த மையம், புறப்பாடு தாமதமான மக்களுக்கு தங்குமிடம், சுகாதாரப் பராமரிப்பு, சட்ட உதவி மற்றும் பயண ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. அனைத்து அத்தியாவசிய சேவைகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் ஒரு ஒருங்கிணைந்த மனிதாபிமான மையமாக செயல்படுகிறது என்று அதிகாரிகள் இதை விவரிக்கின்றனர்.

ADVERTISEMENT

அடைக்கலத்துடன் வசதிகளும் சேவைகளும்

இந்த மையத்திற்கு குடியிருப்பாளர்கள் வந்தவுடன் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிகிச்சை தேவைப்படுபவர்கள் பயணம் செய்வதற்கு முன்பு சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பப்படுகிறார்கள்.

அதன்பிறகு அவர்களுக்குத் தூய்மையான ஆடைகள், தனிப்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, அவர்கள் கொண்டு வரும் பாஸ்போர்ட்கள், பணம், மொபைல்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் போன்ற தனிப்பட்ட உடைமைகள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில், குடியிருப்பாளர்கள் தேவைப்படும்போது தங்கள் மொபைல்களைப் பயன்படுத்தலாம் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தூதரகங்களைத் தொடர்புகொள்ள தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

இந்த அமைப்பு நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், ஒரு கடினமான காலகட்டத்தில் நிலைத்தன்மையையும் கண்ணியத்தையும் மீட்டெடுப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே கூரையின் கீழ் ஒன்பது சேவைகள்

இந்த மையம் ஒன்பது ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குகிறது, அவற்றுள் அடங்குபவை:

  • தற்காலிக தங்குமிடம் மற்றும் உணவு
  • மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிறப்பு நிபுணர் ஆலோசனைகள்
  • சமூக மற்றும் மனிதாபிமான ஆதரவு
  • தனிநபர் பராமரிப்பு சேவைகள்
  • மதிப்புமிக்க பொருட்களின் பாதுகாப்பான சேமிப்பு
  • பாதுகாப்பு சேவைகள்
  • விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
  • தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைப்பு
  • விமான டிக்கெட்டுகள் மற்றும் விமான நிலையப் போக்குவரத்து உள்ளிட்ட பயண ஏற்பாடுகள்

மேலும், குடியிருப்பாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அவசரகால பயண ஆவணங்களைப் பெறுவதற்கும், சட்டப்பூர்வ நடைமுறைகளை முடிப்பதற்கும், மற்றும் புறப்பாடு அனுமதிகளை ஏற்பாடு செய்வதற்கும் பிரத்யேக குழுக்கள் தூதரகங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில், தங்களது புறப்பாடு நடைமுறைகளை முடிக்க இயலாத 11,696 நபர்களுக்கு அடைக்கலம் தரும் மையம் உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே காலகட்டத்தில், இந்த மையம்:

  • 3,22,232 வேளை உணவுகளை வழங்கியது
  • 11,696 மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டது
  • 1,906 சிறப்பு மருத்துவ ஆலோசனைகளை ஏற்பாடு செய்தது
  • 4,568 அவசரப் பயண ஆவணங்களுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டது
  • 11,696 விமானப் டிக்கெட்டுகளைப் பெற உதவியது

குறிப்பாக, மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு முன் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகக் கையாள்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடினமான காலங்களில் ஆதரவு

சமீபத்திய ஒரு நிகழ்வில், வேலை தேடி சுற்றுலா விசாவில் அமீரகத்திற்கு வந்த ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் இங்கு வேலை கிடைக்காததாலும், மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்ட தனது மகளையும் தன்னையும் பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டதாலும், அவர் இந்த மையத்தின் உதவியை நாடியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகளை நிறைவு செய்யும் அதே வேளையில், இந்த மையம் அவர்களுக்குத் தங்குமிடம், சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு மனிதாபிமானப் பணி

இது குறித்து GDRFA துபாயின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி பேசுகையில், இந்த மையம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

இத்தகைய விதிவிலக்கான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் அனைவருக்கும் துபாயின் பாதுகாப்பும் அக்கறையும் நீள்கிறது என்பதை இந்த மையம் நிரூபிப்பதாகக் கூறிய அவர், மக்களின் மிகவும் சவாலான தருணங்களில் அவர்களுக்கு ஆதரவளிப்பது பொதுச் சேவையின் ஒரு முக்கிய அளவுகோல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டினர் கண்காணிப்புப் பிரிவின் உதவித் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் டாக்டர் அலி பின் அஜிஃப் அல் ஜாபி கூறுகையில், சுகாதாரம், சட்ட நடைமுறைகள், தூதரக ஒருங்கிணைப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்தது செயல்முறையை விரைவுபடுத்த உதவியது என்றும், அதே நேரத்தில் குடியிருப்பாளர்கள் அமீரகத்தை விட்டு வெளியேறும் வரை கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில், இந்த மையமானது வெறும் குடியேற்றச் சேவை மையமாக மட்டுமல்லாமல், சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான தனிநபர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாகவும் மாறியுள்ளது தெரிய வருகிறது. இது நடைமுறை உதவிகளை மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கையின் மிகக் கடினமான காலகட்டங்களில் கருணையையும் நம்பிக்கையையும் வழங்குகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel