ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆம், 2026-27 கல்வி ஆண்டிற்கான புதிய பள்ளித் தயார்நிலை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மழலையர் வகுப்பு (KG) முதல் 2-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வழக்கமான வீட்டுப்பாடம் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குழந்தைகளின் முக்கியக் கற்றல் செயல்பாடுகளை வகுப்பறைக்குள்ளேயே அமைத்துக்கொண்டு, அதே வேளையில் அவர்களுக்கு ஓய்வு, விளையாட்டு, வாசிப்பு மற்றும் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் ஆகியவற்றிற்கு அதிக வாய்ப்பளிப்பதே இந்த மாற்றத்தின் நோக்கமாகும்.
அதிகக் கற்றல், குறைவான வீட்டுப்பாடம்
சிறு குழந்தைகளுக்குத் தனித்துவமான வளர்ச்சித் தேவைகள் இருப்பதை உணர்ந்து, பள்ளிக்கு வெளியே அவர்களுக்குத் தேவையற்ற கல்விசார் அழுத்தத்தை அளிக்கக்கூடாது என்பதை இந்த புதிய அணுகுமுறை அங்கீகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வழக்கமான வீட்டுப்பாடங்களை வழங்குவதற்குப் பதிலாக, பள்ளி நேரங்களில் சுவாரஸ்யமான செயல்பாடுகள் மூலம் எழுத்தறிவு, தகவல் தொடர்பு மற்றும் பிற அடிப்படை கற்றல் திறன்களை வளர்ப்பதில் பள்ளிகள் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, முறையான செயல்பாடுகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், அதே சமயம் பள்ளி முடிந்த பிறகு ஓய்வெடுக்கப் போதுமான நேரம் கிடைக்கவும் கூடிய, ஆதரவான வகுப்பறைச் சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
இருப்பினும், வீட்டுப்பாடத்திற்கு மாற்றாக வீட்டில் எளிமையான தினசரி வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்ளுமாறு குடும்பங்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். இது குழந்தைகள் ஒரு நிம்மதியான சூழலில் மொழி மற்றும் வாசிப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும்.
புதிய திட்டம் பெற்றோர்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதோடு, அதே வேளையில் சிறு மாணவர்கள் தங்கள் கல்வியின் அடுத்த கட்டங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் திறன்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்வதை உறுதி செய்யவும் இந்த அணுகுமுறை உதவும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel