துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் சுமார் 500 திர்ஹம்ஸ்க்கு ஷாப்பிங் செய்ததன் மூலம், ஒரு ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை பரிசாக வென்றுள்ளார். இந்தர்ஜீத் கௌர் (Inderjeet Kaur) என்ற பெண் தனது கணவருடன் ஷாப்பிங் சென்றபோது, 500 திர்ஹம் மதிப்பிலான பொருட்களை வாங்கியது, அவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமாக மாறியுள்ளது.
உண்மையில், இந்தப் பரிசுப் போட்டியில் பங்கேற்றதே கௌருக்கு நினைவில் இல்லை என்று கூறியுள்ளார். வீட்டிற்குத் திரும்பிய பிறகு, ஷாப்பிங் ரசீதுகளின் பார்கோடை (barcode) ஸ்கேன் செய்து பதிவேற்றியது அவரது கணவர் குர்சரண்ஜித் சிங் (Gurcharanjit Singh) தான். எனவே, தனக்கு ஒரு அபார்ட்மெண்ட் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கும் அழைப்பு வந்தபோது, அது உண்மையாக இருக்காது என்றே அவர் முதலில் நினைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், போட்டிக்காக ரசீதுகளைப் பதிவேற்றினாரா என்று அவர் உடனடியாகத் தன் கணவரிடம் கேட்ட போது, அவர் ஆம் என்று உறுதிப்படுத்தியதும், அந்த அழைப்பு உண்மையானதாக இருக்கலாம் என்று கௌர் நம்பத் தொடங்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அபார்ட்மெண்ட் எண் மற்றும் பரிசை உறுதிப்படுத்தும் கடிதம் அடங்கிய அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அடுத்த நாள் வந்தபோதுதான், அந்தச் செய்தி அவருக்கு முழுமையாகப் புரிந்தது.
கௌரைப் பொறுத்தவரை, இந்தப் பரிசு வெறும் புதிய சொத்து மட்டுமல்ல. அவர் சுமார் 35 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார், மேலும் ஏற்கனவே அங்கு அவருக்குச் சொந்தமாகச் சொத்துகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் அவர் வசிக்கும் நிலையில், மற்றவற்றை வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் புதிதாக வென்ற ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டையும் வாடகைக்கு விட அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“இதை நிச்சயமாக வாடகைக்குத்தான் விடப்போகிறேன், ஏனெனில் இதை விற்பதில் எந்தப் பயனும் இல்லை. இது ஒரு சொத்து,” என்று கூறிய அவர், துபாய் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “இதுதான் என் வீடு. நான் இங்கேயே வாழ விரும்புகிறேன். இங்கேயே இறக்க விரும்புகிறேன்,” என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தனது ஆழ்ந்த அன்பை கௌர் வெளிப்படுத்தினார்.
மேலும், துபாயுடன் தான் இவ்வளவு நெருக்கமாக உணர்வதற்கு மிக முக்கியக் காரணம், அந்த நகரம் தனது குடும்பத்திற்கு அளித்த வாழ்க்கை முறைதான் என்று கௌர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மனம் திறந்த போது, தனது மகள்களை அமீரகத்திலேயே வளர்த்ததாகவும், அங்கேயே கல்வியும் வேலைவாய்ப்புகளும் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மகள்கள் இப்போது அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், “அவர்கள் இங்கே இருந்தபோது, நான் அதுபற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
துபாயில் பல தசாப்தங்களாக வாழ்ந்த பிறகு, தங்கள் மகள்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நிம்மதியுடன் உறங்க முடிந்ததே, தான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கும் விஷயங்களில் ஒன்றாகும் என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
துபாய் திரும்பும் தம்பதியினர்
பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டியிருந்தபோது அந்தத் தம்பதியினர் அமெரிக்காவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு முன்னதாகவே, வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் விமானம் மூலம் துபாய் வந்திறங்கியுள்ளனர்.
விழாவில் பங்கேற்பதற்காகவும், துபாய் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதற்காகவுமே தாங்கள் திரும்பியதாக அவரது கணவர் கூறியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, தேவையான நடைமுறைகளுக்குச் சிறிது காலம் ஆகலாம் என்பதால், சொத்து ஒப்படைப்பு நிகழ்வு பின்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel