ADVERTISEMENT

ஷார்ஜாவில் நவம்பரில் திறக்கப்படும் அல் தாவூன் சுரங்கப்பாதை! நெரிசல் இனி குறையும் என தகவல்!

Published: 2 Sep 2026, 12:00 PM |
Updated: 2 Sep 2026, 12:01 PM |
Posted By: Menaka

ஷார்ஜாவில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் ஒரு முக்கியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘அல் தாவூன் சுரங்கப்பாதை’ (Al Taawun tunnel) திட்டத்தின் முதல் கட்டம் நவம்பர் மாதத்தில், அதாவது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் சமயத்தில் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக வெளியான விபரங்களின் படி, அல் தாவூன் ரவுண்டானாவுக்கு அடியில் அமையும் இந்த 500 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை, இரு திசைகளிலும் தலா மூன்று பாதைகளைக் கொண்டிருக்கும். இது அல் தாவூன் ஸ்ட்ரீட்டை அல் நஹ்தா பிரிட்ஜ் மற்றும் துபாயுடன் இணைக்கும். இப்பகுதியின் மிக நெரிசலான போக்குவரத்துச் சந்திப்புகளில் ஒன்றில் நெரிசலைக் குறைக்கவும், துபாய் மற்றும் முக்கிய இடங்களுக்கான பயணத்தை எளிதாக்கவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சிக்னல் வசதியுடன் கூடிய புதிய சந்திப்பு ஒன்றும் அமைக்கப்படுகிறது. இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு திசையிலும் மணிக்கு சுமார் 4,200 வாகனங்களைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும், மேலும் ‘எக்ஸ்போ சென்டர் ஷார்ஜா’விற்கான (Expo Centre Sharjah) அணுகலையும் மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், இத்திட்டம் பயண நேரத்தை 85 சதவீதம் வரை குறைக்கும் என்றும், அதே வேளையில் அல் தாவூன் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, போக்குவரத்தை சீராக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முதல் கட்டம் நவம்பர் 2026-ல் திறக்கப்படவுள்ள நிலையில், முழுத் திட்டமும் பிப்ரவரி 2027-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இப்பணிகளுக்காக, அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட அடையாளமாகத் திகழ்ந்த ‘அல் தாவூன் ரவுண்டானா நினைவுச் சின்னம்’ தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அந்தச் சின்னம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற சாலை மேம்பாட்டுப் பணிகள்

இதற்கிடையில், ஷார்ஜா முழுவதும் பிற முக்கிய சாலைத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஷேக் கலீஃபா பின் சயத் ஸ்ட்ரீட் – மலிஹா ஸ்ட்ரீட் சந்திப்பில், 500 மீட்டர் நீளமுள்ள மூன்று வழித்தட மேம்பாலம் மற்றும் சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள தரைமட்டச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 140 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான இத்திட்டம், போக்குவரத்து ஓட்டத்தின் திறனை இருமடங்காக்கும் என்றும், ஷார்ஜா நகர மையத்திலிருந்து மலிஹா சாலைக்குச் செல்லும் பயண நேரத்தை சுமார் 20 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களாகக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கார்னிஷ் ஸ்ட்ரீட் (Corniche Street) மற்றும் போர்ட் ஸ்ட்ரீட் (Port Street) உள்ளிட்ட பல இடங்களில் புதிய பாதசாரி கடவைகள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களை அமைப்பது உட்பட, சாலை பராமரிப்பு மற்றும் பாதசாரிகள் பாதுகாப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்தமாக, இத்திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், நெரிசலைக் குறைத்தல் மற்றும் ஷார்ஜா முழுவதும் தினசரி பயணங்களை வேகமாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel