கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வான எக்ஸ்போ-2020 துபாய் (EXPO-2020 DUBAI) இந்த வருடம் மிக பிரம்மாண்டமான முறையில் துபாயில் நடத்தப்பட உள்ளது.
இந்த வருடம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி எக்ஸ்போ 2020 துபாய் ஆரம்பிப்பதை முன்னிட்டு 100 நாட்களுக்கான கவுண்டவுனை துவங்கி வைத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் உலகம் ஒரு புதிய கட்ட மீட்சியை நோக்கி நகரத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “மிகப்பெரிய சர்வதேச கலாச்சார நிகழ்வை தொடங்க இன்னும் 100 நாட்கள் உள்ளன. 100 நாட்களில் துபாயில் 192 நாடுகள் ஒன்றாக கூடும். தொற்றுநோய்க்குப் பிறகு நடக்கவிருக்கும் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வைத் தொடங்க 100 நாட்கள் மட்டுமே இருக்கின்றது, இதனால் உலகம் ஒரு புதிய மீட்பை நோக்கி நகரத் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்த எக்ஸ்போ நிகழ்விற்காக 50,000 ஊழியர்கள் 192 பெவிலியன்களை முடிக்க பணிபுரிந்தனர், 30,000 தன்னார்வலர்கள் உலகை வரவேற்க தயாராக உள்ளனர்.
100 days to go for Expo 2020 Dubai, the world’s largest cultural event. 100 days to go for the gathering of 192 nations in Dubai in the biggest global event since the outset of the pandemic. 50,000 employees have set up 192 pavilions & 30,000 volunteers are set for the mega event pic.twitter.com/smi5Ib5YuE
— HH Sheikh Mohammed (@HHShkMohd) June 23, 2021
எக்ஸ்போ 2020 துபாயானது மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவில் (MEASA) நடைபெறும் முதல் உலக கண்காட்சி ஆகும்.
‘மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல் (Connecting Minds, Creating the Future)’ என்ற கருப்பொருளின் கீழ், இது புதுமைகளை ஊக்குவிப்பதற்கும், உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கான தீர்வுகளைத் தேடுவதற்கும் உலகெங்கிலும் உள்ள மக்களையும் கருத்துக்களையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டுவரும். கொரோனா காரணமாக ஒரு வருடம் தாமதமாக நடைபெறவிருக்கும் எக்ஸ்போ, பார்வையாளர்களுக்கு சிறந்த மற்றும் மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.
அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் 25 மில்லியன் பார்வையாளர்களை அமைப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
“உலகின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வை நடத்துவதில் நாங்கள் பெறும் வெற்றி, தொற்றுநோயை சமாளிப்பதில் மனித ஒற்றுமையின் சக்தியை பிரதிபலிக்கிறது” என்று மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் கூறியுள்ளார்.
“உலகளாவிய சமூகம் தொற்றுநோயை எதிர்த்துப் போராட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு புதிய கட்ட ஒத்துழைப்புக்குத் தயாராகி வருகிறது. எக்ஸ்போ 2020 துபாய் அறிவு மற்றும் புதுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான தளத்தை வழங்குகிறது”என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.
இந்த எக்ஸ்போ நிகழ்வை ஐக்கிய அரபு அமீரகம் கடுமையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் 90 சதவீத மக்கள் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்டுள்ளனர் என்ற பாதுகாப்பான சூழலுடன் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் தடுப்பூசி விநியோக விகிதத்தில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒரு நாடாக அமீரகம் திகழ்கிறது.
எக்ஸ்போ 2020 துபாய் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் உள்ளடக்கிய கலாச்சார மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான இடத்தை வழங்கும் என்றும் இது கோவிட் -19 க்கு பிந்தைய சகாப்தத்தின் முக்கிய பொருளாதார, வளர்ச்சி மற்றும் கலாச்சார போக்குகளுக்கான பாதையை உருவாக்கும் என்றும் மாண்புமிகு ஷேக் முகம்மது அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் துபாயின் புர்ஜ் கலீஃபா கட்டிடமும் எக்ஸ்போவிற்கு 100 நாட்கள் இருப்பதையொட்டி விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
