அபுதாபியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அபுதாபியின் சுகாதார அதிகாரிகள் ஒரு புதிய செயல்முறையை தொடங்கியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும், அவர்களின் மூலமாக வேறு எவரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்கவும் “தொடர்பு கண்காணிப்பு உதவி அமைப்பு (Contact Tracing Assistant System)” எனும் புதிய விசாரணை மற்றும் தொடர்பு தடமறிதல் முறையை அமீரகத்திலேயே முதன் முறையாக அபுதாபி சுகாதார அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC), அபுதாபி சுகாதாரத் துறையுடன் (DoH) இணைந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் விர்ச்சுவல் சாட் மூலமாக விசாரணை நடத்தி அதன் தொடர்பை கண்டறிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா நோயாளியிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் சமூகத்தில் நோய் பரவுவதைக் கண்காணிக்கவும், அதன் வீரியத்தை கணிக்கவும் மற்றும் பரவலை தடுப்பதற்கும் உண்டான முயற்சிகளை மேம்படுத்தும். தொற்றுநோய்க்கான அறிகுறிகள், வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் சமீபத்திய பயணம் மேற்கொண்டவர்கள் பற்றிய தரவுகளை, நோய் பரவக்கூடிய காலத்தில் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதை உறுதிப்படுத்த இந்த அமைப்பு பயன்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.
கொரோனா பறிசோதனையில் நேர்மறை முடிவைப் பெற்றவர்களுக்கு விர்ச்சுவல் சாட்டைப் பதிவிறக்க SMS வழியாக அரபு மற்றும் ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய ஒரு இணைப்பு அவர்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அபுதாபி சுகாதார துறையின் தலைவர் அப்துல்லா பின் முகமது அல் ஹமேட் தெரிவிக்கையில் “அபுதாபி மற்ற இடங்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக வைரஸ் பரவலைக் கண்டுபிடிப்பதில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. புதிய தொடர்பு தடமறிதல் உதவி அமைப்பு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் உதவும். தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து சுகாதார மையம் காட்டிய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது எப்படி வேலை செய்கிறது..?
கொரோனாவிற்கான பரிசோதனையில் நேர்மறை முடிவைப் பெறும் நபர் சோதனை முடிவைப் பெற்றவுடன், தானாகவே அவரது மொபைல் எண்ணிற்கு விர்ச்சுவல் சாட்டிற்கான இணைப்பைக் கொண்ட ஒரு sms ஐ கணினி அனுப்புகிறது. அதில் அந்த நபரின் எமிரேட்ஸ் ஐடியின் சரிபார்ப்பு முடிந்ததும், உதவியாளர் ஒருவர் அந்த நோயாளியிடம் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டு தகவல்களைச் சேகரிப்பார்.
இந்த புதிய அமைப்பானது வெளிநாட்டிலிருந்து யார் திரும்பி வருகிறார்கள், அல்லது ஒரு பணியிடங்கள், அல்லது சமீபத்தில் ஒரு கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் போன்ற தேவையான தகவல்களை சேகரிக்க இந்த அமைப்பை விசாரணை மற்றும் தொடர்புத் தடமறியும் குழு அனுமதிக்கிறது.
கொரோனா சோதனை மேற்கொண்டு நேர்மறையான முடிவை பெற்ற ஒரு நபர் சோதனை முடிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அவருடன் சாத்தியமான தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியலையும் இது கேட்கும். நோயாளியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ரகசியமாகக் கருதப்படும்.
மேலும் அவை விசாரணைக் குழுவுக்கு வெளியே யாருடனும் பகிரப்படாது. சுகாதார மையத்தின் குழு இந்த அமைப்பின் மூலமாக பெறப்பட்ட தரவை மதிப்பாய்வு செய்து, விடுபட்டுபோன அல்லது தெளிவற்ற தகவல்களை சேகரிக்க தேவையான அழைப்புகளை மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.@adphc_ae has launched the Contact Tracing Assistant System to strengthen efforts to monitor, predict and prevent the spread of Covid-19 in the community by rapidly obtaining important information from those testing positive for Covid-19 using a virtual chat function. pic.twitter.com/6HtU0Rx1wg
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) July 2, 2021