வெளிநாட்டவர்களின் ரெசிடென்ஸ் விசா, விசிட் விசா செல்லுபடியை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்த சவுதி அரசு..!!
கொரோனா பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்ட பயண தடையின் காரணமாக சவூதி அரேபியாவிற்கு வெளியே உள்ள வெளிநாட்டினருக்கான குடியிருப்பு அனுமதி (residence permit), விசிட் விசாக்கள் (visit visa) மற்றும் வெளியேறும் (exit visa) மற்றும் மறு நுழைவு விசாக்களின் (re-entry visa) செல்லுபடியை சவூதி அரேபியாவின் பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் ஆகஸ்ட் 31 வரை கட்டணம் ஏதுமின்றி தானாக நீட்டிக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி, தொற்றுநோயின் விளைவாக சவுதி அரேபியா நாட்டுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு அனுமதிகளின் செல்லுபடி மற்றும் வெளியேறுதல் மற்றும் மறு நுழைவு விசாக்கள் 2021 ஆகஸ்ட் 31 வரையிலும், அதேபோன்று பயண தடை காரணமாக தங்கள் நாடுகளுக்கு செல்ல முடியாமல் சவுதி அரேபியாவிற்குள் தங்கியிருக்கும் பார்வையாளர்களுக்கான விசிட் விசாக்களின் செல்லுபடி 2021 ஆகஸ்ட் 31 வரையிலும் கட்டணமில்லாமலே நீட்டிக்கப்படும்.
சவூதி அரேபியாவின் மன்னர் மாண்புமிகு சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் அவர்கள் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்துவதற்காக பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சவூதியின் நிதி அமைச்சரால் வழங்கப்பட்ட இந்த கட்டணமில்லா விசா நீட்டிப்பு, கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தைத் தணிக்க சவூதி அரசாங்கம் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாகும் எனவும் அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முடிவானது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் நிதி மற்றும் பொருளாதார தாக்கங்களைத் தணிக்க பங்களிக்கும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பாஸ்போர்ட் துறைகளுக்கு வருகை தராமல் தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த கட்டணமில்லா விசா நீட்டிப்பு மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் கூறியுள்ளது.