அமீரகத்தில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என்னென்ன..?? வழிமுறைகளை வெளியிட்ட இந்திய தூதரகம்..!!
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு சமூகத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை விவரிக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்திய புலம்பெயர்ந்தோருக்கு குறிப்பாக ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக இந்திய அரசின் நலன்புரி முன்முயற்சியான பிரவாசி பாரதிய சஹாயதா கேந்திரா (PBSK) இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன
அமீரகத்தில் செய்யக்கூடியவை:
ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டங்களை, குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தை அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் உரிமைகள் மற்றும் வரம்புகள் குறித்து அறியலாம்.
காவல்துறை, தீயணைப்பு, ஆம்புலன்ஸ், மருத்துவமனைகள், இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் தொடர்பு விவரங்கள், இந்திய சங்கங்கள் போன்ற முக்கியமான தொடர்பு எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
எந்தவொரு உடல் ரீதியான துஷ்பிரயோகம், வீட்டு வன்முறை ஆகியவற்றை உடனடியாக காவல்துறையில் புகாரளிக்கவும்.
பணி அனுமதி ரத்து செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தில் வேலை தொடர்பான எந்தவொரு குறைகளையும் புகாரளிக்கவும். இந்த காலகட்டத்திற்கு அப்பால் ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் 6 வது பிரிவின்படி கால அவகாசம் முடிந்ததன் காரணத்தால் அமைச்சகத்தில் குறைகளை பதிவு செய்யக்கூடாது.
உங்கள் மருத்துவ பதிவுகள், சமீபத்திய பாஸ்போர்ட் நகல், விசா நகல், அமைச்சகம் மற்றும் நிறுவனத்துடன் புதுப்பிக்கப்பட்ட பணி ஒப்பந்தம், நிதி பதிவு, நிறுவனத்தின் தகவல், குடியிருப்பு முகவரி ஆகியவற்றை எளிதில் கிடைக்குமாறு வைத்திருங்கள் மற்றும் நம்பகமான குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், எனவே தேவைப்படும்போது அதை விரைவில் மீட்டெடுக்க முடியும்.
பணத்தைப் பெறும்போது அல்லது அனுப்பும்போது பொருத்தமான மற்றும் சட்டரீதியான பணம் அனுப்பும் திட்டங்களைப் பயன்படுத்துங்கள்.
உழைக்க தொடங்கியதில் இருந்தே பென்சன் திட்டத்தைத் தொடங்கவும்.
பணத்தை முதலீடு செய்யும் போது தயாரிப்பு மற்றும் முகவரின் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
அடையாள திருட்டைத் தடுக்க எப்போதும் விழிப்புடன் இருங்கள். அடையாள திருட்டுக்கு எதிராக பாதுகாக்க சிம் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடி, மின்னஞ்சல் கணக்கு, பொதுவான மோசடிகள் குறித்த விழிப்புணர்வு அவசியம்.
அமீரகம் மற்றும் இந்தியாவில் காப்பீட்டுத் தொகை வைத்திருங்கள்
வேலைக்கேற்றவாறு பொருத்தமான வாழ்க்கை முறையை பராமரிக்கவும். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
செய்யக்கூடாதவை
மற்றவர்களைப் புண்படுத்தக்கூடிய மத விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம். நடைமுறையில் உள்ள மரபுகள் அல்லது பாரம்பரியத்தை எந்த வடிவத்திலும் மீற வேண்டாம்.
தடைசெய்யப்பட்ட இடங்களினை புகைப்படம் எடுக்க வேண்டாம். தனிநபரை படங்கள் அல்லது வீடியோக்களை எடுப்பது அல்லது தனிநபர்களின் படங்களை அனுமதியின்றி சமூக ஊடகங்களில் இடுகையிடுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
OTP, பாஸ்வோர்ட், ATM பின் ஆகியவற்றை யாருடனும் பகிர வேண்டாம். வங்கியோ அல்லது அது தொடர்புடைய எந்தவொரு நிறுவனமோ இந்த தகவல்களை உங்களிடம் கேட்பதில்லை.
பொது இடங்களில் மது அருந்த வேண்டாம். மது அருந்துவதற்காக உரிமம் பெற்ற குறிப்பிட்ட இடங்களில் மது அருந்துவது அனுமதிக்கப்படுகிறது.
ஸ்பான்சரிடமிருந்து தப்பியோடாதீர்கள் அல்லது தலைமறைவாகாதீர்கள். MOHRE (80060) மற்றும் இந்திய தூதரகத்திற்கு அறிக்கை தெரிவிக்கவும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை கவனத்தில் கொள்ளுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. PBSK கடந்த ஆண்டு நவம்பரில், தூதரகத்திலிருந்து இந்தியர்களுக்கு சேவைகளை எளிதாக அணுக ஒரு மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது.
சம்பளம் வழங்காதது, பணம் செலுத்துவதில் தாமதம், ஒப்புக் கொள்ளப்பட்ட சம்பளம் கிடைக்காதது, விடுப்பு விண்ணப்பங்களை மறுப்பது, பாஸ்போர்ட்களை நிறுத்தி வைப்பது, விசா முத்திரை தாமதப்படுத்துதல் மற்றும் இது தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்திய சமூகத் தொழிலாளர்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இந்த நலன்புரி மையம் இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.