ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு வேலைவாய்ப்புகளை பல்லாயிரக்கணக்கானோருக்கு வழங்கி வரும் நிலையிலும் தொடர்ந்து சில முறைகேடான நபர்களால் வேலை தேடி அமீரகம் வருபவர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
சமீபத்தில் துபாயில் உள்ள DP World நிறுவனத்திடம் இருந்து கிடைத்த பணி அனுமதியைப் பெற்ற இந்தியர் ஒருவர் அது குறித்த விபரங்களை அறிய தூதரகத்திடம் தெரிவித்த போது அது போலி என தூதரகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்று தொடர்ந்து நடைபெறுவதால் அபுதாபியைச் சேர்ந்த சுகாதாரக் குழு ஒன்று வேலை வாய்ப்புகள் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அபுதாபியில் புகழ்பெற்ற vps ஹெல்த்கேர் அதன் ரெஸ்பான்ஸ் பிளஸ் மெடிக்கல் சர்வீசஸ் (RPM) என்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் ஆர்வலர்களுக்கு அனுப்பப்படுவதைக் கவனித்ததாகக் கூறியுள்ளது.
அபுதாபி, துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் அமைந்துள்ள RPM, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை, இரசாயனத் தொழில்கள் மற்றும் முக்கிய கட்டுமான தளங்களுக்கு மருத்துவ உதவியை வழங்குகிறது, அத்துடன் கல்வி நிறுவனங்கள், தொழிலாளர் தங்குமிடங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவைகளையும் வழங்குகிறது.
VPS ஹெல்த்கேரின் அதிகாரிகள், காலியிடமே இல்லாத வேலைக்கு போலி ஏஜெண்ட்கள் வேலைகளை வழங்குவதாக கூறி வேலை தேடுபவர்களை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த போலி வேலை ஒப்பந்தத்தைப் பெற்றவர்களில் ஒருவர் தென்னிந்திய மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஆவார். வெளிநாட்டில் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடும் அவர் வேலை தேடி ஒரு உள்ளூர் முகவரை அணுகியிருந்துள்ளார்.
செவிலியர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து ஒரு விர்ச்சுவல் முறையில் நேர்காணல் நடத்தப்பட்டது, மற்றும் வாட்ஸ்அப் வழியாக வேலைவாய்ப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் “தொற்றுநோய்களின் போது, சுகாதாரத் துறையில் வெளிநாடுகளில் பல காலியிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. நான் GCC யில் நல்ல வேலை பெற முயற்சித்தேன். இந்தியாவில் ஒரு செவிலியராக எனக்கு மூன்று வருட அனுபவம் உள்ளது” என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “எனக்குக் கிடைத்த வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தின்படி, எனக்கு 5,000 திர்ஹம் சம்பளமும், தங்குமிடமும் வழங்கப்பட்டது. நான் அந்த வேலையின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முயற்சித்த போதுதான் அது போலி என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே நான் ஏமாற்றப்படவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் உண்மையான தன்மையை சரிபார்க்காமல் பல சுகாதார ஊழியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்” என்றும் கூறியுள்ளார்.
VPS ஹெல்த்கேர் அல்லது அதன் துணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் அல்லது துணை நிறுவனங்கள் என்று கூறி தனிநபர்கள் அல்லது ஏஜென்சிகள் பரப்பிய போலி விளம்பரங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு நர்சிங் ஆர்வலர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை குழு எச்சரித்துள்ளது.
RPM இன் தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் டாம் லூயிஸ் கூறுகையில் “சமீபத்தில் ஒரு பெரியளவில் செவிலியர்களுக்கு வேலை கிடைத்ததாக கூறி மோசடி நடந்தது. தொற்றுநோய் சூழலைப் பயன்படுத்தி, இந்த முகவர்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக உறுதியளித்து வேலை தேடும் குறிப்பிட்ட நபர்களை அணுகுகிறார்கள். வேலை தேடுபவர்கள் முறையான சேனல்களைப் பயன்படுத்த வேண்டும், இதுபோன்று ஏமாறாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
VPS ஹெல்த்கேரின் தலைமை மனிதவள அலுவலர் சஞ்சய் குமார் கூறுகையில், VPS குழு சார்பாக வேலை வாய்ப்புகளை வழங்க எந்த மூன்றாம் தரப்பினருக்கும் குழு அங்கீகாரம் அளிக்கவில்லை. இது விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்தவொரு நிலையிலும் கட்டணத்தை வசூலிக்காது” எனக் கூறியுள்ளார்.
இதுபோன்ற போலி வேலை வாய்ப்புகளைக் காணும் அல்லது மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்த நபர்கள் அது தொடர்பான விவரங்களை info@vpshealth.com அல்லது contactus@rpm.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு சுகாதாரக் குழு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.