அமீரகத்தின் தேசிய நெருக்கடி மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) ஆகியவை, ஐக்கிய அரபு அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற குடியிருப்பாளர்கள் ஆகஸ்ட் 5 முதல் அமீரகம் திரும்பலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து தற்போது, அமீரகத்தில் இரண்டு டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அமீரகம் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.
கூடுதலாக தடுப்பூசி போடப்படாத சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், மனிதாபிமான வழக்குகள் மற்றும் மத்திய மற்றும் உள்ளூர் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) மற்றும் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) ஒப்புதல்கள் மேற்கூறிய பயணிகளுக்கு கட்டாயமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த நாடுகளில் இருந்து கடந்த மூன்று மாத காலமாக அமீரகத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் பல குடியிருப்பாளர்களின் விசாக்கள் காலாவதியாகியும், சிலருக்கு ஆறு மாதங்களுக்கு மேல் நாட்டிற்கு வெளியே தங்கக்கூடிய சூழலும் உருவாகி இருந்தது. இதனால் குடியிருப்பாளர்கள் பயணத்திற்கு முன் அவர்களின் விசா நிலைகளை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருந்தால் என்ன செய்வது..?
பொதுவான விதி என்னவென்றால், வெளிநாடுவாழ் குடியிருப்பாளர்கள் அதாவது, ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருந்தால் அவர்களின் ரெசிடென்ஸ் விசா தானாகவே ரத்து செய்யப்படும். இவ்வாறு ரத்து செய்யப்பட்டால், அவர்கள் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய புதிய நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான காரணங்களுக்காக புதிய விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்றும் குடியுரிமை மற்றும் வெளியுறவு பொது இயக்குனரகம் (GDRFA) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. எனினும், இது அவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காது என்று பொருளல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகம் நுழைவதற்கு விசா செல்லுபடியாகும் என்பதை எவ்வாறு சரிபார்க்க முடியும்..?
துபாய் குடியிருப்பாளர்கள் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடி எண்களைப் பயன்படுத்தி தங்கள் விசா நிலையை கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கலாம்.
https://smart.gdrfad.gov.ae/Smart_OTCServicesPortal/ReturnPermitServiceForm.aspx
துபாய் தவிர மற்ற அனைத்து எமிரேட்ஸிலிருந்து பெறப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் தங்கள் விசா நிலையை கீழே உள்ள இந்த லிங்கில் பார்க்கலாம்.
https://smartservices.ica.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity
மறு நுழைவு அனுமதிக்கு தாக்கல் செய்த பிறகு அடுத்தது என்ன செய்ய வேண்டும்..?
ஆறு மாதங்களுக்கு மேலாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே சிக்கித் தவிக்கும் ஊழியர்கள், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் ஊழியர் என்று குறிப்பிட்டு, தங்கள் முதலாளி அல்லது ஸ்பான்சரால் வழங்கப்பட்ட ஆதரவு கடிதத்தை விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
விசா காலாவதியானால் என்ன செய்ய முடியும்..?
தற்போது வரையிலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே பயண தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருப்பவர்களில் விசா காலாவதியான அமீரக குடியிருப்பாளர்கள் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாமா..?
குடியிருப்பாளர் வெளிநாட்டில் இருக்கும்போது விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க தற்போது எந்த ஏற்பாடும் நடைமுறையில் இல்லை. எவ்வாறாயினும், கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டவுடன் இது தொடர்பான வழிகாட்டுதலை வெளிநாடுகளில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் வழங்கலாம்.
சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையலாமா..?
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷில் இருந்து சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் இந்த நாடுகளில் இருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய முடியாது. அதற்கு பதிலாக, அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் வருவதற்கு முன் குறைந்தது 14 நாட்களுக்கு பயண தடை விதிக்கப்படாத பசுமை நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அமீரகம் பயணிக்கலாம்.