அபுதாபியில் வரும் ஆகஸ்ட் 20, 2021 வெள்ளிக்கிழமை முதல், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே பல்வேறு பொது இடங்களில் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்த முடிவு குறித்து குடியிருப்பாளர்களுக்கு அபுதாபியின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்தியில், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அபுதாபியில் பல்வேறு பொது இடங்களுக்கு நுழைவதற்கு அனுமதி என்ற நடவடிக்கையானது அமலுக்கு வர 10 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது என்று கூறியுள்ளது.
இந்த முடிவு கொரோனா தொற்றுநோயை எதிர்ப்பதற்கான அபுதாபியின் மூலோபாயத்திற்கு ஏற்ப உள்ளது மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறைவு செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள குடியிருப்பாளர்களில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு இந்த நடவடிக்கை வருகிறது என்று ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த குழு சமூக உறுப்பினர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் என்று கூறியுள்ளது.
அத்துடன் இந்த குழு முதல் கட்டமாக ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், கஃபேக்கள், ஸ்பாக்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மருந்துக் கடைகள் தவிர ஷாப்பிங் சென்டரில் இல்லாததையும் சேர்த்து மற்ற அனைத்து விற்பனை நிலையங்களையும் உள்ளடக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் முதல் கட்டத்தில் ஜிம்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள், சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ், அருங்காட்சியகங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் தீம் பார்க், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அபுதாபியில் உள்ள குழந்தைகள் நர்சரிகள் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
There is less than 10 days to go before entry to some public places in Abu Dhabi is allowed only for those vaccinated. The decision made by Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee will come into effect 20 August 2021. pic.twitter.com/kDU2JdVS2H
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) August 10, 2021
அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை மற்றும் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி போடுவதற்கு விலக்கு பெற்ற தடுப்பூசி போடாத நபர்களுக்கும், 16 மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் இந்த முடிவு பொருந்தாது என்றும் குழு கூறியுள்ளது.
இந்த முடிவானது அபுதாபியின் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், இதில் தொழில்துறை பகுதிகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் முன்கூட்டிய சோதனைப் பிரச்சாரங்கள், தொற்றுநோயைக் கண்டறிய நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தகுதியானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது மற்றும் தடுப்பூசி பிரச்சாரம் ஆகியவை அடங்கும்.
இந்தக் குழு தொடர்ந்து அனைத்து செயல்முறைகளையும் மதிப்பீடு செய்து வருகிறது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.