ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய நாட்டவரக்ளுக்கு இந்தியாவில் இருந்து போலீஸ் அனுமதி சான்றிதழ் வழங்க ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உள்ளூர் போலீசாரிடம் அனுமதி சான்றிதழ் கேட்பதை நிறுத்துவதாக அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம், அமீரகத்தில் வசிக்கும் இந்திய வெளிநாட்டவர்களுக்கு தூதரக விஷயங்கள் தொடர்பான பல்வேறு நடைமுறைகளை எளிமையாக்கும் நோக்கத்துடன் இந்திய போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவதற்கு உள்ளூர் போலீஸ் (அமீரக போலீஸ்) அனுமதி சான்றிதழ் இனி தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.
“அதன்படி இந்திய போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவைப்படும் எந்த இந்திய சேவை தேடுபவரும், உள்ளூர் அனுமதி சான்றிதழ் தேவையில்லாமல், தூதரகத்தின் அவுட்சோர்ஸ் சேவை வழங்குநரான BLS இன்டர்நேஷனலை அணுகலாம்” என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை இந்திய சேவை தேடுபவர்களுக்கு பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டது என்றும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தங்களின் குடியிருப்பு நிலை, வேலைவாய்ப்பு அல்லது நீண்ட கால விசா அல்லது குடிவரவுக்காக விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு இந்திய போலீஸ் அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்திய வெளிநாட்டவர்கள் தங்கள் முதலாளிகளால் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளைப் பொறுத்து வேலைவாய்ப்புக்காக இந்தியாவில் இருந்து போலீஸ் அனுமதி சான்றிதழை நாடுகின்றனர் என்று ஒரு தூதரக அதிகாரி கூறியுள்ளார். குறிப்பாக இந்தியாவிற்கு மேற்கே இருக்கும் நாடுகளில் குடியேற விரும்பும் இந்திய வெளிநாட்டினருக்கு சொந்த நாட்டிலிருந்து போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அமீரகத்தில் புலம்பெயர்ந்தோர் இந்திய போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவதற்கு இதற்கு முன்னதாக கட்டாயமாக உள்ளூர் அனுமதி சான்றிதழும் பெற வேண்டியிருந்தது. இது அரபியில் இருந்தால், அவர்கள் சட்டப்பூர்வ மொழிபெயர்ப்பையும் செய்ய வேண்டும். இது கூடுதல் பணம் மற்றும் நேரத்தை உள்ளடக்கியது. இந்த உட்பிரிவை நீக்குவதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு பணம் மற்றும் நேரம் மிச்சமாகும்” என்றும் அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.