இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீடித்து வந்த விமான பயண தடையானது குறிப்பிட்ட பிரிவினருக்கு நீக்கப்பட்டதற்குப் பிறகும் கூட, அமீரக அரசு விதித்திருக்கும் சில நிபந்தனைகளின் காரணமாக அமீரகத்திற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மற்ற அமீரக வாழ் இந்திய குடிமக்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய இந்திய தூதரகம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இந்திய தூதர் பவன் கபூர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு திரும்ப முடியுமா என்ற நிச்சயமற்ற நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர், இதுபோன்ற கவலைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்ற 75 வது இந்திய சுதந்திர தின விழாவில் அவர் உரையாற்றும்போது, “குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்புவது சுமார் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கானது என்றாலும், இதை விரிவாக்க நாங்கள் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் தவித்து வரும் மற்ற பிரிவினர்களும் விரைவில் அமீரகம் திரும்பி வர அனுமதிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று இந்திய தூதர் பவன் கபூர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து துபாய்க்கு செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் இல்லை என்றாலும், அபுதாபியை தளமாகக் கொண்ட எதிஹாட் ஏர்வேஸ் பயணத்திற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே அமீரகத்தில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றதற்கான சான்றை அளிக்க வேண்டும் என்று அறிவித்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “துபாய் அதிகாரிகள் இந்தியாவில் சிக்கித் தவித்த காலத்தில் காலாவதியானவர்களின் விசாக்களை ஏற்கனவே நீட்டித்துள்ளனர். அபுதாபி அதிகாரிகளும் விரைவில் இதை பின்பற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். விரைவில் அமீரக வாழ் இந்தியர்கள் தங்கள் இரண்டாவது வீடான அமீரகத்திற்கு திரும்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் எங்கள் மக்களின் கவலைகளை போக்க தற்போதைய சூழ்நிலையை மேம்படுத்துவது மற்றும் மறுசீரமைப்பது குறித்து முயற்சி செய்து வருகிறோம் என்றும், மேலும் அவர்கள் வேறு வகையான வாய்ப்புகளுடன் எவ்வாறு அமீரகம் திரும்பி வர முடியும் என்பதையும் நாங்கள் உற்றுநோக்கி வருகிறோம் என்றும் இந்திய தூதர் பவன் கபூர் மேலும் தெரிவித்துள்ளார்.