கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான ஆயுதங்களில் முக கவசம் மிக முக்கியமான ஒன்றாகும். கொரோனா தொற்று குறைந்துள்ள பல நாடுகள் முக கவசங்கள் போடுவதற்கான விதிகளை தளர்த்தியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்றானது படிப்படியாக குறைந்து வருகின்றது. நடப்பு மாதமானது (ஆகஸ்ட்) இந்த ஆண்டிலேயே இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது.
இருப்பினும், பொது இடங்களில் முக கவசம் போடுவதற்கு உண்டான கட்டுப்பாடுகளில் அதிகாரிகள் எந்த தளர்வையும் அறிவிக்கவில்லை. கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் முக கவசம் அணிய தவறினால் ஐக்கிய அரபு அமீரக பப்ளிக் பிராசிக்யூஷன் தெரிவித்துள்ளதன்படி 3,000 திர்ஹம் அபராதமானது தொடர்ந்து நீடிக்கும் என குறிப்பிடபட்டுள்ளது.
ஷாப்பிங் மால்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாகும்.
வாகன ஓட்டுநர் தனியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் வாகனத்தில் பயணம் செய்தால் முக கவசம் அணியாமல் இருக்கலாமே தவிர மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாகும்.
முக கவசத்தை பின்வரும் சூழ்நிலையின் போது மட்டுமே போடாமல் இருக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவை
> கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் சாப்பிடும் போது அல்லது குடிக்கும் போது.
> ஒரு நபர் நுரையீரல் அல்லது சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டிருந்து மருத்துவ அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் அவர் முக கவசம் அணிவது கட்டாயமில்லை.
> ஒருவர் தனியாக ஒரு விளையாட்டை விளையாடும்போது.
> ஒரு நபர் அலுவலகத்தில் தனியாக வேலை செய்யும் போது.
> ஒரு நபர் மருத்துவ பரிசோதனை செய்ய விரும்பும் போது.
> கடுமையான இயலாமையால் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்
மேற்கண்ட சூழ்நிலையில் மட்டுமே ஒருவர் முக கவசத்தை அகற்ற அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.