ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை விடுமுறை மற்றும் சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கப்பட்டதன் விளைவால் துபாய் சர்வதேச விமான நிலையம் அதிகளவிலான பயணிகளை எதிர்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) வரும் பயணிகளுக்கு சேவை செய்வதற்காக துபாய் மெட்ரோ நாளை கூடுதலாக இரண்டு மணிநேரங்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை ரெட் மற்றும் கிரீன் லைனில் இயக்கப்படும் என்று கூறியுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையம் வார இறுதி நாட்களில் அதிகளவு பயணிகளை எதிர்கொண்டு பரபரப்பாக இருக்கும் என்பதால் பயணிகளை ஆதரிக்கும் பொருட்டு இந்த கூடுதல் சேவை இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெட்ரோவில் செல்லும் பயணிகள் இரண்டு சூட்கேஸ் மற்றும் ஹாண்ட் லக்கேஜினை எடுத்துச் செல்லலாம்.
ஆகஸ்ட் 12 மற்றும் 22 க்கு இடையில் பயணிகள் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் என்று துபாய் சர்வதேச நிலையம் ஏற்கெனவே கூறியிருந்தது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எதிர்பார்க்கப்படுவதால், வார இறுதி நாட்களில் சராசரியாக 100,000 பயணிகளை துபாய் விமான நிலையம் எதிர்கொள்ளும் என மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.