இந்தியா, இலங்கையிலிருந்து இ-விசாவில் பயணம் செய்யும் பயணிகள் ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவுக்கு பயணிக்கும் போது கொரோனா தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று ஏர் அரேபியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
புதிதாக வழங்கப்பட்ட இ-விசாக்களுடன் இந்த இரண்டு எமிரேட்களுக்கும் வரும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு முன்பு ICA-வில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்து 14 நாட்களுக்குப் பிறகு அமீரகத்திற்குப் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடுப்பூசி சான்றிதழையும், அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேட்டஸையும் கொண்டிருக்க வேண்டும்.
அபுதாபி, ஷார்ஜா, ராஸ் அல் கைமா, ஃபுஜைரா, உம் அல் குவைன் மற்றும் அஜ்மனில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ICA இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், அதே நேரத்தில் துபாய் குடியிருப்பாளர்கள் பயணத்திற்கு முன் GDRFA தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அனைத்து தடுப்பூசி மற்றும் தடுப்பூசி போடப்படாத மருத்துவ பணியாளர்களும் அமீரகத்திற்குள் நுழையலாம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் ஆசிரியர்கள் உட்பட கல்வித் துறை ஊழியர்கள், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் படிக்கும் மாணவர்கள், செல்லுபடியாகும் விசாக்களைக் கொண்ட மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்புபவர்கள் (குடும்ப மறு இணைப்புக்கு); கூட்டாட்சி மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் அரசு ஊழியர்கள்; கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையைப் பொருட்படுத்தாமல் அமீரகத்திற்கு நுழையலாம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையிலிருந்து வரும் பயணிகள் தற்போது மூன்றாம் நாட்டில் 14 நாள் தனிமைப்படுத்தலில் இருந்து, தனிமைப்படுத்தல் காலம் முடிவதற்குள் அமீரகம் பயணம் செய்ய விரும்பினால், அவர்கள் சம்பந்தப்பட்ட அமீரக அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.