குவைத் அரசால் சமீப காலமாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய திட்டங்களால் வெளிநாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டதின் விளைவாக உணவகம் மற்றும் ஹோட்டல் துறைகளில், டெலிவரி சேவைகள் உட்பட பல்வேறு சேவைகள் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதாக குவைத்தின் செய்தி நிறுவனம் அல் கபாஸ் தெரிவித்துள்ளது.
மார்ச் 2020 ல் தொடங்கி மார்ச் 2021 வரை தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதைக் காட்டும் அரசாங்க அறிக்கையின் நகலைப் பெற்றுள்ளதாக இந்த செய்தித்தாள் நிறுவனம் கூறியுள்ளது.
உணவகங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஃபஹத் அல் அர்பாஷ், “வெளிநாட்டு ஊழியர்களின் ஆட்சேர்ப்பு நிறுத்தி வைப்பதன் காரணமாக சமையல்காரர்கள், பேக்கர்கள், இனிப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் பிற அனுபவமுள்ள சிறப்புத் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் சரியாக செயல்பட முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் உள்நாட்டு தொழிலாளர் சந்தையில் கிடைக்கும் தொழிலாளர்கள் உணவக செயல்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை. அதுமட்டுமல்லாமல் உணவுத் தொழிலில் சேர அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எளிதல்ல என்றும் அல் அர்பாஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் “கேட்டரிங் சேவைகளில் உள்ள தொழிலாளர்களின் சம்பளம், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த காலத்தில் 150 குவைத் தினார் உணவகத்தில் பணிபுரியும் ஒரு துப்புரவாளருக்கு வழங்கப்பட்ட நிலையில் இப்போது 300 தினார்சம்பளம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் உணவகத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு கடந்த காலத்தில் 400 தினார்கள் வழங்கபட்டு வந்த நிலையில் தற்பொழுது 1,000 தினார்கள் வழங்கப்பட்டு வருகிறது” என்றும் அவர்கூறியுள்ளார்.
வளைகுடா நாடுகளில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகமிருந்த நாடுகளில் குவைத் நாடும் ஒன்றாகும். கடந்த ஆண்டு வரை வெளிநாட்டவர்கள் 70 சதவிகிதமும் குவைத் குடிமக்கள் 30 சதவிகிதமும் இருந்த நிலையில் அரசானது இந்த மக்கள்தொகை ஏற்ற இறக்கத்தை சரிசெய்து 70 சதவிகித குடிமக்களாகவும் 30 சதவிகித வெளிநாட்டினரகவும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக பல்வேறு துறைகளில் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக குவைத் குடிமக்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு அந்த முடிவானது செயல்படுத்தப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.