சர்வதேச விமானப் போக்குவரத்து தடையை நவம்பர் மாதமும் நீட்டித்த இந்தியா..!!
இந்தியாவில் நடைமுறையில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை நவம்பர் 30 வரை நீட்டிப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது.
இருப்பினும், சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு இயக்கப்படும் குறிப்பிட்ட விமான சேவைகளுக்கும் இந்த தடை பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து கடந்த மார்ச் 23, 2020 முதல் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து சர்வதேச விமானங்களும் தடை செய்யப்பட்டன.
மேலும் இந்த விமானத் தடை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
இருப்பினும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதன் காரணமாக அந்நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
உலகின் பல நாடுகள் தங்களின் சர்வதேச விமான சேவையை மீண்டும் இயக்கத் துவங்கினாலும் குறிப்பிட்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவானது தனது விமானப் போக்குவரத்துத் தடையை நீட்டித்துக் கொண்டே இருக்கின்றது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தடை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.