ஐக்கிய அரபு அமீரகமானது கொரோனாவில் மாறுபாடுடைய புதிய வைரஸான ஓமைக்ரான் வைரஸின் முதல் பாதிப்பை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
அமீரகத்திற்கு வந்த ஒரு ஆப்பிரிக்கப் பெண் பயணியிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (Mohap) ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அவர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய நெறிமுறையின்படி, கொரோனாவிற்கான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு வேறு எந்த அறிகுறியும் காட்டாததால், அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று MoHAP கூறியுள்ளது. அத்துடன் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செயலூக்கமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பல்வேறு வகையான கொரோனா மாறுபாடுகளை சமாளிக்க சுகாதாரத் துறை தயார்நிலையில் இருப்பதை MoHAP மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் பெறுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் கடுமையான அறிகுறிகள் மற்றும் இறப்புகளைத் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.