கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டால் எக்ஸ்போ 2020 அரங்குகள் தற்காலிகமாக மூடப்படலாம்..!! அமைப்பினர் தகவல்..!!
அமீரகத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய ஒரு சில நாட்களிலிருந்து கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் கோரோனா மேற்கொண்டு பரவாமல் தடுக்கவும், நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும் அமீரகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமீரக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 தளத்தில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டால் எக்ஸ்போ தளத்தில் இருக்கும் அரங்குகள் ஆழ்ந்த சுத்தம் மற்றும் சுத்திகரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படலாம் என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எக்ஸ்போவின் கடுமையான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்றும் இது எக்ஸ்போ தளத்தில் உள்ள அனைவரையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பராமரிப்பு, தனியார் நிகழ்வுகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றிற்காகவும் அரங்குகள் மூடப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்ஸ்போ 2020 நிகழ்வானது கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை 8 மில்லியனுக்கும் அதிகமான வருகைகளைப் பதிவு செய்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், எக்ஸ்போவில் உள்ள ஜப்பான் பெவிலியனில் பணிபுரியும் சில ஊழியர்கள் கொரோனாவிற்கான சோதனையில் நேர்மறை முடிவை பெற்றதை அடுத்து, அங்கிருந்த ஒரு உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அமைப்பினர் கூறுகையில், எக்ஸ்போ பணியாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனையின் போது இந்த நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பான உலகக் கண்காட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை இரட்டிப்பு செய்வதற்கு கூடுதல் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் சமீபத்தில் எக்ஸ்போவில் இருக்கும் ஆன்-சைட் PCR சோதனை மையங்கள் நான்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து நாட்டு பெவிலியன் ஊழியர்களுக்கும் இந்த மையங்களில் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து முன்னணி பணியாளர்கள் மற்றும் பொழுதுபோக்காளர்கள் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும், அணிவகுப்புகள் மற்றும் ரோவிங் என்டர்டெயின்னர்கள் போன்ற சில நெருங்கிய தொடர்பு நிகழ்வுகளினால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால் குறுகிய கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவை இரண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.