துபாயில் நடைபெற்று வரும் உலகின் பிரம்மாண்ட நிகழ்வான எக்ஸ்போ 2020 வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 10 மில்லியன் வருகைகளைப் பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பார்வையாளர்கள் எக்ஸ்போவிற்குள் நுழைய 10 திர்ஹம் மட்டுமே கட்டணம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
இந்த 10 மில்லியன் வருகையை முன்னிட்டு ஜனவரி 16 அன்று நடத்தப்படும் கொண்டாட்டங்களில் பார்வையாளர்கள் கலந்து கொள்ளுமாறு எக்ஸ்போ அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இதற்கான டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை முதல் மாலை 5 மணிக்கு ஆன்லைனில் அல்லது எக்ஸ்போ 2020 துபாய் கேட்ஸில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீசன் பாஸ் வைத்திருக்கும் பார்வையாளர்கள், கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
அத்துடன் எப்பொழுதும் போலவே எக்ஸ்போவிற்குள் நுழைய பார்வையாளர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனையின் எதிர்மறையான முடிவையோ அல்லது தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தையோ சமர்ப்பிக்க வேண்டும்.
தடுப்பூசி போடாத பார்வையாளர்கள் டிக்கெட்டைப் பயன்படுத்தி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் இருந்து இலவச PCR சோதனைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.