வாகனம் ஓட்டும்போது முறையாக இண்டிகேட்டர்களை பயன்படுத்த தவறும் நபரா நீங்கள்..?? இது சாலைப்பயனர்களுக்கு சில நேரங்களில் மோசமான விபத்து ஏற்பட வழிவகுக்கும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக வாகன ஓட்டிகள் சாலைகளில் பாதைகளை மாற்றும் முன் அல்லது திசையை மாற்றும் முன் இண்டிகேட்டர்களை பயன்படுத்தாத ஓட்டுநர்களுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
அபுதாபி காவல்துறையின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் அபுதாபியில் மொத்தம் 16,378 வாகன ஓட்டிகளுக்கு இண்டிகேட்டர்கள் அல்லது டர்ன் சிக்னல்களைப் பயன்படுத்தாததற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி விவரிக்கையில் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகள் சரியான நேரத்தில் திருப்ப சமிக்ஞைகளை பயன்படுத்துமாறும், அவற்றை உரிய நேரத்தில் அணைக்குமாறும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், “இண்டிகேட்டர்களை பயன்படுத்தாதது, அந்த வாகனத்தை மட்டுமல்லாமல் பிற சாலைப் பயணிகளுக்கும் விபத்து ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது.
வாகன ஓட்டிகள் பாதைகளை மாற்றுவது அல்லது திசையை மாற்றுவது, பின்னால் இருக்கும் வாகனத்தையோ அல்லது சாலையில் மற்ற பாதைகளை ஆக்கிரமித்திருப்போரின் கவனத்தையோ திசை திருப்புகிறது. இது குறிப்பாக வாகன ஓட்டி வேகமாகச் சென்றால் மோதலுக்கு வழிவகுக்கும்” என்று ஒரு அறிக்கையில் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் முறையாக விதிமுறைகளை பின்பற்றுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.