ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது குளிர்கால சீசன் என்பதால் அமீரகத்தின் பெரும்பாலான இடங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் வெப்பநிலை வெகுவாக குறைந்தும், காலை நேரங்களில் எதிர் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு அடர்ந்த பனிமூட்டமாகவும் காணப்படுகிறது.
இன்று காலை துபாய் மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த பகுதிகளில் காலை 9 மணி வரை வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் நிலவி வரும் வானிலை குறித்து NCM வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இன்று சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், காலை வேளையில் வெப்பநிலை குளிர்ச்சியாக காணப்பட்ட நிலையில், பகல் நேரத்தில் நாடு முழுவதும் வெப்பநிலையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் NCM தெரிவித்துள்ளது. இருப்பினும் வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெப்பநிலை மேலும் 4 – 8 ° C க்கும் கீழ் கணிசமாக குறையும் என்றும் NCM கூறியுள்ளது.
NCM வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று புதன்கிழமை நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை கடலோரப் பகுதிகளில் 21 – 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், நாட்டின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 22 – 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் மற்றும் மலைப்பகுதிகளில் 10 – 16 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
அதே போன்று மாலை வேளையில் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை 13 – 18 ° C ஆகவும், உள் பகுதிகளில் 11 – 16 ° C ஆகவும், மலைப் பகுதிகளில் 4 – 8 ° C ஆகவும் வெப்பநிலை குறையும் என்றும் NCM குறிப்பிட்டுள்ளது. கடலோர மற்றும் உள் பகுதிகளில் மாலையில் ஈரப்பதம் 85 – 95 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், இதனால் நாளை வியாழக்கிழமை அதிகாலை மூடுபனி உருவாகும் எனவும் NCM குறிப்பிட்டுளளது.
எனினும் கடல் பகுதிகளை பொறுத்தவரை அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடலின் சீற்றம் ஓரளவு அமைதியாக இருக்கும் என்றும் அமீரகத்தின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram