வளைகுடா நாடுகளில் வேலையிழந்து இந்தியா திரும்பியவர்கள் சுமார் 7 இலட்சம் பேர்.. வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்…!!
உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவலால் இலட்சக்கணக்கில் மக்கள் வேலையிழந்த நிலையில், இந்திய தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் வளைகுடா நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தாயகம் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் தரவுகளின்படி, கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆறு வளைகுடா நாடுகளில் இருந்தும் 700,000 க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் தாயகம் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்குத் திரும்பிய 716,662 தொழிலாளர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 330,058 பேர், சவுதி அரேபியாவில் இருந்து 137,900 பேர், குவைத்தில் இருந்து 97,802 பேர் மற்றும் ஓமனில் இருந்து 72,259 பேர் ஆவர்.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கான அரசு சார்ந்த வந்தே பாரத் மிஷன் (VBM) திட்டத்தின் கீழ் இந்த தொழிலாளர்கள் திரும்பி வந்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த திட்டமானது தற்போது 15 ஆம் கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி அவர் கூறுகையில், “எங்கள் நோக்கம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொழிலாளர்களை மீண்டும் அங்கு திரும்ப அனுப்ப செய்வதாகும். வளைகுடாவில் அவர்களில் பலர் தங்கள் பழைய வேலைக்குத் திரும்ப வேண்டும். வேலைகளைத் தக்கவைத்தல், ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்தல், தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்துதல், ஆகியவையே எங்கள் பணிகளின் முன்னுரிமை. இதற்காக வளைகுடா அரசாங்கங்களுடன் எனது சார்பாகவும் தூதர்கள் சார்பாகவும் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.