இந்தியர்கள் அதிகம் சென்று தொழில்புரியும் முக்கிய நாடுகளின் வரிசையில் முதன்மையாக இருப்பது வளைகுடா நாடுகள். சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன் என இந்த ஆறு நாடுகளிலும் கடந்த சில தசாப்தங்களாகவே இந்தியர்களே அதிகளவு மக்கள் எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்றாலே முதலிடம் பிடிப்பது இந்திய தொழிலாளர்கள்தான். ஆனால் தற்பொழுது வெளியிட்டுள்ள குவைத்தின் தொழிலாளர் சந்தை புள்ளிவிவரங்களில் குவைத் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது எகிப்து.
குவைத்தின் செய்தி நிறுவனமான அல் கபாஸ் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகையில் 24 சதவீதம் பெற்று 456,600 என்ற தொழிலாளர் எண்ணிக்கையில் எகிப்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்தியா 23.7 சதவீதம் பெற்று 451,300 என்ற எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக குவைத் நாட்டு குடிமக்கள் 424,100 என்ற எண்ணிக்கையுடன் 22.3 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
இதனையடுத்து முறையே பங்களாதேஷ் 161,100 (8.5%) என்ற எண்ணிக்கையும், பாகிஸ்தான் 70,300 (3.7%) என்ற எண்ணிக்கையும், ஃபிலிப்பினோ 66,000 (3.5%) என்ற எண்ணிக்கையும், சிரியா 63,200 (3.3%) என்ற எண்ணிக்கையும் பெற்றுள்ளன.
எட்டாவது இடத்தில் நேபாளம் 40,100 (2.1%) என்ற எண்ணிக்கையும், ஜோர்டான் 25,200 (1.3%) என்ற எண்ணிக்கையும், பத்தாவது இடத்தில் 20,300 (1.1%) என்ற எண்ணிக்கையுடன் ஈரானும் உள்ளது. குவைத்தில் மற்ற நாட்டு தொழிலாளர்கள் 125,100 (6.6%) என்ற எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.