துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழு புதன்கிழமை துபாயில் நடைமுறையில் இருக்கும் அனைத்து கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளையும் படிப்படியாக நீக்குவதாக அறிவித்துள்ளது.
தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளுக்கு இணங்க, துபாயில் அனைத்து செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் படிப்படியாக முழு திறனுக்கு திரும்பும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு வித்திட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்ததற்காக அதிகாரிகள் மக்களுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், முக கவசம் அணிவது உட்பட கொரோனாவிற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட நடவடிக்கைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் படிப்படியாக நீக்கப்படும் என்று தேசிய அவசரகால நெருக்கடி மேலாண்மை ஆணையம் அறிவித்ததையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் கொரோனாவிற்கான அதிகளவு தடுப்பூசி விகிதம் பெற்றுள்ள நாடுகளில் அமீரகம் முதல் வரிசையில் உள்ளது. அமீரகத்தின் பெரும்பாலான மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தற்பொழுது அபுதாபியில் நான்காவது டோஸ் போட்டுக்கொள்வதற்கான அறிவிப்பும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.