துபாயில் உள்ள ஒரு மிகப்பெரிய காய்கறி சேமிப்பு கிடங்கிற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் இருந்து திருட்டுத்தனமாக 10 வெங்காய மூட்டைகளை திருடும் போது பிடிபட்ட இரண்டு நபர்களை நாடு கடத்த துபாய் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாயில் உள்ள அல் அவிர் பகுதியில் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற பழங்கள் மற்றும் காய்கறி சந்தை ஒன்று உள்ளது. அங்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த வெங்காய மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்த லாரியை அங்கிருந்த இரண்டு நபர்கள் கண்காணித்துள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து அதிலிருந்து வெங்காய மூட்டைகளை அந்த இரண்டு நபர்களும் திருடியுள்ளனர்.
இருவரும் திருடி கொண்டு போகும்போது அங்கு பணியில் இருந்த ஒரு செக்யூரிட்டி ஒருவர் அந்த இரண்டு நபர்களையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். பின்னர் உடனே துபாய் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.
வெங்காயம் திருடியவர்களை கைது செய்த போலீசார் மேல்விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். அப்போது நடைபெற்ற விசாரணையில் சொந்த நலனுக்காக வெங்காயத்தை திருடியதாகவும், அதனை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின் முடிவில், வெங்காய திருட்டில் ஈடுபட்ட அந்த இரண்டு பேருக்கும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையை விதித்ததுடன், தண்டனை காலம் முடிந்ததும் அவர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேறவும் துபாய் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிலும் கூட வெங்காயம் கடும் விலை ஏற்றம் கண்டதை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் இது போன்ற வெங்காய திருட்டு சம்பவங்கள் அரங்கேறியதும் குறிப்பிடத்தக்கது.