அமீரகத்தில் பிளாஸ்டிக் அரிசி அல்லது சாப்பிட முடியாத அரிசி விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவிய நிலையில், இந்த தகவல்கள் தவறானவை என்று அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) திங்களன்று தெரிவித்துள்ளது. உண்மையில், அபுதாபி சந்தைகளில் விற்பனையில் உள்ள ஒவ்வொரு வகையான அரிசியும் மனித நுகர்வுக்கு ஏற்றது மற்றும் இது உணவு பாதுகாப்பது ஆணையத்தால் சரிபார்க்கப்பட்டது என்றும் ஆணையம் கூறியுள்ளது.
சவூதி அரேபியாவில் பிளாஸ்டிக் அரிசி கிடைப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிக்கை உணவு பாதுகாப்பு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக பரவிய செய்திகளை சவூதி அரசு ஊடகமும் மறுத்துள்ளது.
அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, அபுதாபியில் அரிசி வகைகளின் சோதனைகளில் ஆய்வக பகுப்பாய்வு, நேரடி ஆய்வு, தயாரிப்பு சோதனைகள் மற்றும் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கின் போது பயன்படுத்தப்படும் எந்தவொரு சேர்க்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடைமுறைகளும் அடங்கும்.
நுகர்வுக்குப் பாதுகாப்பற்ற பொருட்கள் சந்தைகளில் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் விழிப்புடன் இருப்பதாக உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தவறான மற்றும் சரிபார்க்கப்படாத உணவுப் பாதுகாப்பு அறிக்கைகளை குடியிருப்பாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், அத்தகைய அறிக்கைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்கவும் உணவு பாதுகாப்பு ஆணையம் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மாறாக, குடியிருப்பாளர்கள் அபுதாபி அரசாங்க கால் சென்டருக்கு 800555 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் அல்லது அதன் சமூக ஊடக சேனல்கள் உடன் இணைப்பதன் மூலம் ஏதேனும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மீறல்களைப் பற்றி புகாரளிக்கலாம் எனவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அபுதாபியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மீறல்கள் தொடர்பான ஒரு சம்பவத்தை ஆணையத்திற்கு புகாரளித்தால், அதிகாரிகள் அந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்வது மட்டுமல்லாமல், விதியை மீறுபவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் புகார் அளித்தவர்களுக்கு தெரிவிப்பார்கள் என்றும் அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.