துபாய்: ஏப்ரல் 1 முதல் சென்னை உள்ளிட்ட ஒன்பது இந்திய நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை அறிவித்த எமிரேட்ஸ்..!!
கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயண கட்டுப்பாடுகளை இந்தியா நீக்கியதை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான நேரடி விமான சேவை வழங்கும் விமான பயணங்களை வரும் ஏப்ரல் 1 ம் தேதி முதல் உயர்த்த இருப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் துபாய்க்கும் சென்னைக்கும் இடையேயான எமிரேட்ஸ் விமான சேவையின் எண்ணிக்கை வாரத்திற்கு 21 விமான சேவைகளாக உயரவுள்ளது.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் புதிய அறிவிப்பின்படி, ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் உள்ள ஒன்பது முக்கிய நகரங்களுக்கு வழங்கி வரும் சேவையை அதிகரிப்பதன் மூலம் வாரத்திற்கு 170 விமானங்களை இயக்கவுள்ளதாக கூறியுள்ளது. மேலும் அதன் நெகிழ்வான முன்பதிவு வசதியை மே 31, 2022 வரை நீட்டிப்பதாகவும் எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனம் கூடுதல் விமானங்களை இயக்கவுள்ள முக்கிய நகரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஒரு வாரத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை – 21 விமானங்கள்
- கொச்சி – 14 விமானங்கள்
- திருவனந்தபுரம் – 7 விமானங்கள்
- ஹைதராபாத் – 21 விமானங்கள்
- பெங்களூரு – 24 விமானங்கள்
- மும்பை – 35 விமானங்கள
- புது தில்லி – 28 விமானங்கள்
- கொல்கத்தா – 11 விமானங்கள்
- அகமதாபாத் – 9 விமானங்கள்
மேலும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் புதுதில்லியில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தில் முதல் மற்றும் பிசினஸ் வகுப்பில் பயணிக்கும் பயணிகள், விமான நிலையத்திற்குச் செல்லவும், விமானத்தின் உலகளாவிய நெட்வொர்க்கிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றடையும் போது, இலவச ஓட்டுநர் டிரைவ் சேவையைப் பெறலாம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று பிரீமியம் கேபின்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எமிரேட்ஸ் ஸ்கைவார்ட்ஸ் உறுப்பினர்கள், துபாயில் உள்ள எமிரேட்ஸ் பிரத்யேக லவுஞ்ச் அனுபவத்தையும், உலகம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் உள்ள லவுஞ்ச் அனுபவத்தையும் பெறலாம் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.