அமீரகத்தில் இன்று நிலவும் மோசமான வானிலை.. துபாய் மெட்ரோ சேவை நாளை அதிகாலை வரை நீட்டிப்பு.. RTA தகவல்..!!
அமீரகம் முழுவதும் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்பாளர்களின் வசதிக்காக இன்று செவ்வாய்கிழமை (ஏப்ரல் 16) மெட்ரோ இயங்கும் நேரத்தை நீட்டிப்பதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. அதன்படி, மறுநாள் புதன்கிழமை (ஏப்ரல் 17) அதிகாலை 3:00 மணி வரை துபாய் மெட்ரோ சேவை நீட்டிக்கப்படும் என RTA கூறியுள்ளது.
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று என நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது நிலவும் இந்த சீரற்ற காலநிலையின் போது, துபாய் மற்றும் பிற எமிரேட்களிலிருந்து வரும் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் RTA தெரிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருவதால், அபுதாபி, துபாய், ஷார்ஜா, ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இடங்களில் தீவிர மழை பெய்து வருகிறது. குறிப்பாக அபுதாபி சிட்டியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
அத்துடன், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம், சையத் சர்வதேச விமான நிலையம், அல் பத்தீன் விமான நிலையம் மற்றும் ஷார்ஜா மற்றும் புஜைரா விமான நிலையங்கள் உட்பட முக்கிய விமான நிலையங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
ஆயினும், விமானம் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை. இருப்பினும், விமான பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன்பு விமானத்தின் நிலையை சரிபார்த்துக்கொள்ளுமாறு விமான நிறுவனங்களும், துபாய் விமான நிலையமும் பயணிகளுக்கு அறிவுறை வழங்கியுள்ளது.
UAE: மோசமான வானிலை காரணமாக அரசு ஊழியர்களுக்கு தொலைதூர வேலை.. அமீரக அரசு அறிவிப்பு..!!
UAE மோசமான வானிலை எதிரொலி.. தனியார் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்ட மனிதவள அமைச்சகம்..!!
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.