குழந்தைகளை ஒரு போதும் வாகனத்தில் தனியே விட்டு செல்ல வேண்டாம்..!! காவல்துறை எச்சரிக்கை..!!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு போதும் தனியாக வாகனத்தில் விட்டு செல்ல வேண்டாம் என அபுதாபி காவல்துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். எந்த ஒரு காரணமாக இருந்தாலும் தங்கள் குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டு செல்லக்கூடாது என்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் காவல்துறையினர் ஒரு அனிமேஷன் குறும்படமாக வெளியிட்டுள்ளனர்.
அபுதாபி காவல்துறையானது தனது புதிய விழிப்புணர்வு வீடியோவில், நீண்ட நேரமாக வாகனங்களுக்குள் குழந்தைகளை மறந்துவிடுவது மூச்சுத் திணறல், சுயநினைவு இழப்பு மற்றும் அதிக வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டியுள்ளது.
ஷாப்பிங் செய்யும் போது அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் சிறுவர்களை வாகனங்களுக்குள் விட்டு செல்வது சட்டத்தால் தண்டிக்கக்கூடிய குற்றமாகும் என்றும் காவல்துறையினர் எச்சரிதுள்ளனர். மேலும், குழந்தைகளுக்கு மயக்கம் அல்லது தூக்கம் வரும் போதெல்லாம் வாகனங்களின் பின் இருக்கைகளில் தனியாக உக்கார வைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை பெற்றோர்கள் தனியாக வாகனத்தில் விட்டு விட்டு ஷாப்பிங் சென்றதால் வாகனங்களுக்கும் இருந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவங்கள் சில நடந்துள்ளன. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சம்பவத்தில், இரு குழந்தைகளை விட்டு சென்ற வாகனமானது திடீரென தீப்பிடித்ததால் அந்த குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது எப்பொழுதும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஒரு போதும் வாகனத்திற்குள் குழந்தைகளை தனியே விட்டு செல்லவேண்டாம் என்றும் அதிகாரிகள் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளனர்.