குவைத் மன்னர் மறைவையொட்டி இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு..!!
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமத் அல் சபா அவர்களின் மறைவையொட்டி குவைத்தில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் மற்ற வளைகுடா நாடுகளில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரது மறைவிற்கு உலகத்தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் குவைத் மன்னரின் மறைவையொட்டி, அக்டோபர் 4 ம் தேதி அன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய நாளில் இந்தியாவின் அனைத்து கட்டிடங்களில் இருக்கும் தேசியக்கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அன்றைய நாளில் எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டின் மன்னராக இருந்த எமிர் ஷேக் சபா அல் அகமது அல் சபா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவிற்கு சிகிச்சை பெற சென்றதையடுத்து செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 91 வயதை அடைந்த மறைந்த குவைத் நாட்டின் மன்னர் எமிர் ஷேக் சபா அல் அகமது அல் சபா அவர்களின் உடல் அமெரிக்காவில் இருந்து குவைத்திற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் மறைவையொட்டி, அவரது சகோதரரான எமீர் ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா அவர்கள் புதிய மன்னராக நேற்று (புதன்கிழமை) முதல் பதவிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.