சவூதி அரேபியாவில் பட்டப்படிப்பு முடித்திருக்கும் அந்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு சவூதி அரேபிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் சவூதிசைசேஷன் எனும் திட்டத்தின் அடிப்படையில் தற்போது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழில்களை (IT) உள்ளூர்மயமாக்கும் நோக்கில் தனியார் துறையில் 9,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான முடிவை சவூதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அகமது பின் சுலைமான் அல்-ராஜி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வேலைகள் (communications and IT), பயன்பாட்டு மேம்பாடு (application development), புரோகிராமிங் மற்றும் அனலைசிஸ் (programming and analysis) மற்றும் டெக்னிகல் சப்போர்ட் (technical support) ஆகிய துறை சார்ந்த நிறுவனங்களில், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் இந்த முடிவு பொருந்தும் எனவும் அமைச்சரவை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் துறையில் பணிபுரியக்கூடிய குடிமக்களுக்கு ஊதியமாக சிறப்பு வேலைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் SR7,000 மற்றும் தொழில்நுட்ப வேலைகளுக்கு SR5,000 எனவும் அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.
சவூதி அரேபியாவில் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட பட்டதாரிகளுக்கு உதவுவதற்கும், அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் அரசு மற்றும் மேற்பார்வை நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் மூலம் குறிப்பிட்ட தொழில்களை உள்ளூர்மயமாக்குவதற்கான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி நாட்டு குடிமக்களுக்கு தனியார் துறையில் பொருத்தமான மற்றும் ஆர்வமிக்க வேலை சூழலை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டும் சவூதி அமைச்சரவை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முன்னதாக மருத்துவ துறையில் உள்ளூர்மயமாக்கும் திட்டத்தின் கீழ் மருந்தகங்களில் சவூதி நாட்டு குடிமக்கள் பணியமர்தப்பட்டதும், அதனை தொடர்ந்து கடந்த மாதம் பொறியியல் துறையிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக உள்ளூர்மயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.