துபாய்: இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து விசிட் / சுற்றுலா விசாவில் வருவோர் கவனத்திற்கு..!! 2,000 திர்ஹம்ஸ் பணம் கையில் இருக்க வேண்டும் எனவும் தகவல்..!!
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமீரகத்திற்குள் நுழைவதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத, விமான நிலையத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான பயணிகள் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட ஐந்து நாடுகளில் இருந்து துபாய் வரும் விசிட் / சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய பயண நடைமுறைகளை செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் மற்றும் பயண முகவர்கள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
GDRFA துபாய் அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து விசிட் மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (DWC) ஆகியவற்றில் நுழைவதற்கு செல்லுபடியாகும் இரு வழி பயண டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விசிட் / சுற்றுலா விசாக்களில் துபாய்க்கு வரும் பயணிகள் தாங்கள் தங்க கூடிய நாட்களுக்கு ஹோட்டல் அறை முன்பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் உறவினர்கள் அல்லது குடும்பத்தினர்களின் சிபாரிசு வேண்டும் எனவும் குடியுரிமை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்டு நாடுகளிலிருந்து துபாய் வந்த 500 க்கும் மேற்பட்ட பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்குண்டான நிபந்தனைகளுக்கு இணங்காதலால் அவர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனை தொடர்ந்தே தற்போது இந்த நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேற்கூறிய விதிமுறைகளை பின்பற்றாத பயணிகள் அவர்கள் வருகை தந்த சம்பந்தப்பட்ட விமானங்களில் அவர்கள் வந்த அதே இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று விமான நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, விசிட் / சுற்றுலா விசாக்களில் துபாய்க்குச் செல்லும் இந்திய பயணிகளுக்கான பயண புதுப்பிப்புகளை இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோவும் வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில் துபாய்க்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா / விசிட் விசா வைத்திருப்பவர்கள் பயணம் மேற்கொள்ள செல்லுபடியாகும் இரு வழி டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது குறித்து இண்டிகோ வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் அத்தகைய பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும், அவ்வாறு பயணித்தவர்கள் அவர்களின் சொந்த செலவுகளில் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர் என்றும் கூறியுள்ளது.
துபாய் வருவதற்கான புதிய நடைமுறை குறித்து டிராவல் ஏஜெண்டுகள் தெரிவிக்கும்போது, இந்த குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களுடன் குறைந்தபட்சம் 2,000 திர்ஹம்ஸ் (இந்திய ருபாய் மதிப்பில் 40,000) வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர். இருப்பினும் விமான நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில் இது குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.