ஒவ்வொரு வருட புத்தாண்டின் போதும் துபாயில் இருக்கும் உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் (Burj Khalifa) வான வேடிக்கை, லேசர் ஷோ என புத்தாண்டு மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அது போலவே தற்பொழுது வரவிருக்கும் 2021-ம் ஆண்டு புத்தாண்டின் போதும் புர்ஜ் கலீஃபா களை கட்டப் போகின்றது என Emaar அமைப்பினர் தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் புத்தாண்டை புர்ஜ் கலீஃபா தலை சிறந்த வான வேடிக்கைகள், ஒளி மற்றும் லேசர் நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட இருப்பதாக அதன் டெவெலப்பரான Emaar நிறுவனம் அறிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அனைத்து பார்வையாளர்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, துபாய் அரசாங்க வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளுக்கு ஏற்ப, உடல்வெப்பநிலையை சோதனையிடும் தெர்மல் கேமராக்கள், சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வானது உலகளவில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அமீரக நேரப்படி இரவு 8.30 மணி முதல் mydubainewyear.com இல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டவுன்டவுன் துபாயில் (downtown dubai) நடைபெறவிருக்கின்ற கண்கவர் புத்தாண்டு நிகழ்வுகள் குறித்து Emaar-ன் நிறுவனர் முகமது அலபார் அவர்கள் கூறுகையில், “உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களை வழங்குவது Emaar-ன் ஒரு தனித்துவம். இந்த ஆண்டு இன்னும் மிகப்பெரிய அளவிலான புத்தாண்டு நிகழ்வுகளை வழங்க உள்ளோம். உலகம் தற்பொழுது மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு இருக்கின்றது. இருப்பினும், நாம் ஒன்றுபட்டுள்ளோம். இந்த ஆண்டிலிருந்து முன்பை விட வலுவாக வெளியே வருவோம். இந்த புத்தாண்டின் போது நாங்கள் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நேர்மறை செய்தியை பகிர விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், புத்தாண்டிற்கு ஷேக் மொஹமட் பின் ரஷீத் பவுல்வர்டு (Sheikh Mohamed bin Rashid Boulevard) மற்றும் துபாய் மால் டெர்ரஸ்களில் (The Dubai Mall terraces) உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் திறந்திருக்கும் மற்றும் இரவு கொண்டாட்டங்களுக்கு முன்பதிவானது பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புர்ஜ் பார்க்கிற்கு (Burj Park) குடும்பமாக செல்லலாம் என்றும் உலகெங்கிலும் இருந்து கொண்டாடப்படும் புத்தாண்டு நிகழ்வுகளைக் காண்பிக்கும் ஒரு பெரிய திரை ஒன்றும் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.