UAE: ஊழியர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள நிறுவனங்களை வலியுறுத்தும் அபுதாபி அரசு..!!
கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியினை போட்டுக்கொள்ள ஊழியர்களை வலியுறுத்துமாறு அபுதாபியில் பொருளாதார மேம்பாட்டு துறை அபுதாபியில் உரிமம் பெற்ற வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்ட தொடர் அறிவுறுத்தல்களில், ஊழியர்களுக்காக அவ்வப்போது PCR சோதனைகளை மேற்கொள்ளவும், பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் உரிமையாளர்களை பொருளாதார மேம்பாட்டு துறை வலியுறுத்தியுள்ளது. அமீரகத்தின் சமுதாயத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த அபுதாபி அரசாங்கத்தின் அக்கறையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அபுதாபி அரசு அறிவித்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்வருமாறு:
- அலுவலகத்தை தொடர்ச்சியாக சுத்திகரிப்பு செய்தல்
- தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் விசிட்டர்களிடையே சமூக இடைவெளி கடைபிடித்தல்
- அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிந்திருத்தல்
- அவ்வப்போது PCR சோதனைகள் மேற்கொள்ளுதல்
- COVID-19 தடுப்பூசி எடுக்க ஊழியர்களை வலியுறுத்துதல்
- கொரோனாவிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுதல்
மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என பொருளாதார மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 10 முதல், அனைத்து வணிக உரிமையாளர்களும் ஏற்கனவே கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்களைத் தவிர, மற்ற ஊழியர்களுக்காக மேற்கொள்ளப்படும் கொரோனாவிற்கான PCR சோதனைக்கான கட்டணத்தை நிறுவனமே ஏற்க வேண்டும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.