அபுதாபிக்குள் நுழையும் நடைமுறைகளில் புதிய கட்டுப்பாடுகள்..!! இன்று முதல் அமல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வரும் குடியிருப்பாளர்களுக்கான நடைமுறைகளில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையானது வரும் பிப்ரவரி 1 திங்கள் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அபுதாபிக்கு வரும் நபர்கள் கொரோனாவிற்கான எதிர்மறை சோதனை முடிவுகளை அல் ஹோஸ்ன் (Al Hosn) அப்ளிகேஷனில் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் SMS நோட்டிபிகேஷன் மூலம் வரும் கொரோனவிற்கான எதிர்மறை சோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், AlHosn அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அது கட்டாயமாக்கவில்லை.
இந்த அப்ளிகேஷன் மூலம் கொரோனாவிற்கான சோதனை முடிவுகள் மட்டுமல்லாது ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து அமீரக விமான நிலையத்திற்கு வந்தடைந்த நாட்களின் எண்ணிக்கையையும் தெரிந்துகொள்ளலாம். இந்த தகவல்களின் மூலம் ஒரு நபரின் தனிமைப்படுத்தல் குறித்த தகவல்களை அதிகாரிகள் கண்டறிய உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, அபுதாபிக்குள் நுழைவதற்கு கொரோனாவிற்கான DPI சோதனை முடிவைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் அபுதாபியில் நுழைய வேண்டும். ஆனால் DPI சோதனை முறையை தொடர்ச்சியாக இரண்டு முறை அபுதாபிக்குள் நுழைய பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், DPI சோதனை முடிவுடன் அபுதாபியில் நுழைந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக தங்கியிருப்பவர்கள் அபுதாபிக்குள் நுழைந்த மூன்றாவது மற்றும் ஏழாம் நாளில் PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
PCR சோதனை முடிவைப் பெற்று அபுதாபிக்குள் நுழைபவர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட சோதனை முடிவைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. PCR சோதனை மேற்கொண்டு அபுதாபிக்குள் நுழைபவர்கள் அபுதாபிக்குள் நுழைந்த நான்காவது மற்றும் எட்டாவது நாளில் மீண்டும் PCR சோதனை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைகளானது கொரோனா தடுப்பூசிக்கான 3 ம் கட்ட மருத்துவ சோதனைகளின் தன்னார்வலர்களுக்கும், தேசிய தடுப்பூசி திட்டங்களின் ஒரு பகுதியாக தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தாது. அவர்கள் அல் ஹோஸ்ன் பயன்பாட்டில் கோல்டன் ஸ்டார் அல்லது ‘E’ நிலையைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.