UAE: கொரோனாவிற்கான இலவச தடுப்பூசி சேவை இனி டிரைவ் த்ரூ மையங்களிலும் கிடைக்கும்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசி பெற விரும்பும் குடியிருப்பாளர்களுக்காக டிரைவ் த்ரூ சேவை மையங்களை சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்துடன் ஒன்றிணைந்து விரைவில் தொடங்கவிருப்பதாக அபுதாபி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மார்ச் மாத இறுதிக்குள் தடுப்பூசி போடுவதற்கான தகுதிவாய்ந்த மக்களில் குறைந்தது 50 சதவீதத்தினருக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி சேவைகளை வழங்கவிருக்கும் இந்த டிரைவ் த்ரூ சேவை மையங்களானது அபுதாபியில் மட்டுமல்லாது அபுதாபிக்கு வெளியே அமீரகத்தின் மற்ற பகுதிகளிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி ஹெல்த்கேர் சேவை நிறுவனமான SEHA-வினால் அமீரகத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் PCR டிரைவ் த்ரூ சோதனை மையங்களில் குடியிருப்பாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி சேவைகள் கிடைக்கும் மருத்துவ மையங்களின் எண்ணிக்கையானது 218 ஆக உயர்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சின் (MoHAP) ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தடுப்பூசி இயக்கம் சமூகத்திற்குள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பராமரிக்கவும் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார மற்றும் தடுப்புத்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ் அவர்கள் கூறுகையில், “COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கும் சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கும் தடுப்பூசி என்பது பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும். அபுதாபியின் சுகாதாரத் துறையுடன் இணைந்து கொள்வதன் மூலம், நாட்டில் உள்ள மக்களில் தடுப்பூசி போடுவதற்கான தகுதி வாய்ந்த மக்களில் 50 சதவீத மக்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் கோவிட் -19 தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை துரிதப்படுத்துகிறோம். கொரோனா வைரஸை வென்றெடுப்பதற்கும், விரைவில் குணமடைவதற்கும் தடுப்பூசி மிகச்சிறந்த தீர்வாகும்” என்று தெரிவித்துள்ளார்.
அபுதாபியின் சுகாதாரத் துறையின் தலைவர் ஷேக் அப்துல்லா அல் ஹமேத் அவர்கள் கூறுகையில், “COVID-19 தடுப்பூசிகள் அவற்றின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத்தை உறுதிப்படுத்த கடுமையான அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை செயல்முறைகளுக்கு உட்பட்டுள்ளன. நம்முடைய மற்றும் நம் தேசத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, தயக்கமின்றி, தடுப்பூசி போடுவதை தேர்வு செய்ய அனைவரையும் ஊக்குவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசியானது இரண்டு டோஸ்களைக் கொண்டுள்ளது. சுகாதார மதிப்பீட்டைத் தொடர்ந்து முதல் டோஸ் செலுத்திய பிறகு, இரண்டாவது டோஸ் 21-28 நாட்களுக்குப் பிறகு செலுத்தப்படுகிறது.
ஜனவரி 19 நிலவரப்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும், தடுப்பூசி விநியோக விகிதம் 100 நபர்களுக்கு 20.88 ஆக உள்ளது என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவிற்கான தடுப்பூசியினை 16 வயது முதல் மருத்துவ தகுதி வாய்ந்த அனைத்து குடிமக்களும் குடியிருப்பாளர்களும் இலவசமாக போட்டுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.