ஓமான் : நில எல்லைகள் மீண்டும் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அறிவிப்பு..!! நாளை முதல் அமல்..!!
ஓமானில் புதிய வகை கொரோனா வைரசிற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக நாட்டின் எல்லைகள் ஒரு வாரத்திற்கு மீண்டும் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான பணியினை மேற்கொள்ளும் உச்சக் குழு நாளை (ஜனவரி 18 திங்கள்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு நாட்டின் எல்லைகளை மூடுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ்சிற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக, நாளை மாலை 6 மணி முதல் தனது நில எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. இது மேலும் நீடிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை மீறல்களை நாட்டின் அதிகாரிகள் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், விதிகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து கொரோனாவிற்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக முக கவசங்களை அணியாமல் இருத்தல், அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் கூட்டங்களை நடத்துதல் போன்ற விதிமீறல்கள் நிகழ்வதாகவும் குழு தெரிவித்துள்ளது. இந்த காரணங்கள் நாட்டில் வைரஸ் தொற்றை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
மேலும், ஓமானில் புதிதாக 526 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மூன்று பேர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 131790 ஆகவும் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,512 ஆகவும் உள்ளது. இதுவரையிலும் 124,067 பேர் கொரோனா பாதித்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.