வளைகுடா செய்திகள்

பயணத்தடையை நீக்கும் சவூதி அரேபியா..!! அனைத்து நாட்டு விமானங்களின் போக்குவரத்திற்கும் மார்ச் மாதம் முதல் அனுமதி..!!

கொரோனா பாதிப்பினால் சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயணக்கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டு இருந்தாலும், தற்பொழுது வரை அந்நாட்டில் சர்வதேச விமானப் போக்குவரத்தானது இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்தியா உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கு தற்பொழுது வரை பயணத்தடை இருந்து வருகின்றது.

சவூதி அரேபியா பயணக்கட்டுப்பாடுகளை விதித்து ஓராண்டு நிறைவுற இருக்கும் வேளையில், இந்த தற்காலிக பயண தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் தொடங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து சர்வதேச விமானங்களின் போக்குவரத்து சேவையும் வரவிருக்கும் மார்ச் மாதம் 31 ம் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வரும் சர்வதேச போக்குவரத்தானது, பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது.

  • குடிமக்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்து திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள்.
  • சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடை நீக்கப்படும்.
  • அனைத்து வான், கடல் மற்றும் நில எல்லைகள் மீண்டும் திறக்கப்படும்.

இந்த முடிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கூறிய நடவடிக்கைகளை அமல்படுத்துவது சம்பந்தப்பட்ட குழுவினரால் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய அரசானது கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனாவின் பாதிப்பையொட்டி பயணத்தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!